பதிவு செய்த நாள்
12
ஜன
2015
11:01
கூடலூர் : "ஐயப்ப ஜோதி காண செல்லும் வெளி மாநில பக்தர்கள் வசதிக்காக, பந்திபூர் - முதுமலை சாலையில், ஏழு நாட்களுக்கு மட்டும் இரவிலும், ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் சென்று வர அனுமதிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும், 14ம் தேதி, ஐயப்ப ஜோதி காண, திரளான ஐயப்ப பக்தர்கள், சபரி மலைக்கு செல்கின்றனர். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கான மற்றும் சில வட மாநில பக்தர்கள், நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக, குருவாயூர் சென்று, தரிசனம் முடித்து, சபரி மலை சென்று வருகின்றனர். இவர்கள், சபரிமலை சென்று வர இதுவே முக்கிய வழிதடமாகும். ஆனால், கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக, இரவு, 9:00 முதல் காலை, 6:00 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐய்ப்ப பக்தர்கள் சிலர் கூறுகையில்,"வரும் 16ம் தேதி வரை, ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மட்டும் இரவில் சென்று வர, வனத்துறையினர் அனுமதிக்க வேண்டும்; இதற்கான மனுக்களை கர்னாடக வனத்துறையிடம் கொடுத்துள்ளோம் என்றனர்.