திருச்செந்தூர் யானை குமரன் மரணம்: பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2015 12:02
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் யானை குமரன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தது. சிறப்பு பூஜைகளுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாந்தி என்ற பெண் யானை சில ஆண்டுகளுக்கு முன் இறந்தது. இதையடுத்து 2006ல் குமரன், தெய்வானை என்ற யானைகளை முன்னாள் தக்கார் தேவ தாசசுந்தரம் உபயமாக வழங்கினார். குமரனுக்கு 13 வயது. சில மாதங்களாக மதநீர் சுரந்த பிரச்னையால் குமரன் பாதிக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் நடந்த யானைகள் புத்துணர்வு முகாமிற்கு குமரன் அனுப்பப்படவில்லை. இரு நாட்களாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டதால் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு, குமரனை நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்ல யானைப் பாகன்கள் சென்றனர். உட்கார்ந்த நிலையிலேயே குமரன் மரணம் அடைந்திருந்தது. கோயில் இணை கமிஷனர் ஞானசேகரன், தக்கார் கோட்டை மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் குமரனுக்கு அஞ்சலி செலுத்தினர். பின், பூஜைகள் நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. குமரனுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.