ராமேஸ்வரத்தில் காணாமல் போன தீர்த்தங்களை விவேகானந்த கேந்திரத்தினர் கண்டுபிடித்து மீண்டும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அவை மீண்டும் காணாமல் போய் விடாமல் இருக்க அவற்றுடன் இந்த தீர்த்தங்கள் சார்ந்த ஐதீகங்களையும் அவற்றுடன் இணைந்த சடங்குகளையும் கடைபிடிக்க வேண்டும். அவற்றை இன்றைய சமுதாய நிலைக்கும் சுற்றுச்சூழல் உணர்வுக்கும் ஏற்றபடி பழமை அழியாமல் புதுமையாக மாற்ற வேண்டும். உதாரணமாக லட்சுமண தீர்த்தத்தை எடுத்துக் கொள்ளலாம்.
ஸ்ரீராமர் தீர்த்தத்திலிருந்து கோயில் நோக்கி செல்லும் வழியிலுள்ளது லட்சுமண தீர்த்தம். இங்கு லட்சுமணர் தாம் தம்மை அறியாது செய்திருக்கக் கூடிய பாவச்செயல்களுக்கு பரிகாரம் செய்திட இந்த தீர்த்தத்தை உருவாக்கினார். இங்கு அவரே சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். எப்படி மைய கோயிலில் இருக்கும் சிவபெருமான் ராமேஸ்வரர் என அழைக்கப்படுகிறாரோ அப்படியே இங்குள்ள சிவபெருமான் லட்சுமனேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
ராமாயண காலத்திற்கு பின் மகாபாரத போர் நடந்த காலம். பலராமருக்கு அதில் மக்கள் மடிவது பிடிக்கவில்லை. அந்த போரில் ஈடுபட மாட்டேன் எனக் கூறி தீர்த்தயாத்திரை மேற்கொண்டார். அதன்படி அவர் நைமிசாரண்யத்தை அடைந்தார். அங்கே சூதமகரிஷியிடம் மகரிஷிகள் புராணங்களை கேட்டனர். பலராமரை பார்த்து சூதமகரிஷி மரியாதை செய்யவில்லை. ஆத்திரமடைந்த பலராமர் ஏர் ஆயுதத்தால் சூதமகரிஷியை தாக்க அவர் இறந்து விட்டார். அப்படியே சூதமகரிஷியை பலராமர் உயிர்ப்பித்தார். இருப்பினும் அவருக்கு மனவருத்தம் ஏற்பட்டது. போரை வெறுத்து தீர்த்தயாத்திரை கிளம்பிய தான் இப்படி ஆத்திரத்தையும் ஆணவத்தையும் அடக்காமல் ஒரு உயிரை கொலை செய்து விட்டோம் என்ற வருத்தம் ஆட்கொண்டது.
ஆயுதமில்லாத ஒருவரை அதுவும் ஞானத்தை பிறருக்கு போதிக்கும் ஒருவரை கொன்றோம் என்ற பாவம் குறித்த குற்றஉணர்ச்சியால் அவர் கஷ்டப்பட்டார். இதனை கண்ட முனிவர்கள் அவரிடம் கோபத்தாலும் அகங்காரத்தாலும் ஏற்பட்ட இந்த பாவகாரியத்துக்கு பரிகாரம் லட்சுமணதீர்த்தம் செய்து நீராடி நித்திய கடன்களை செய்து அங்குள்ள லட்சுமனேஸ்வரராக விளங்கும் சிவலிங்கத்தை வழிபடும்படி கூறினர். அவ்வாறே பலராமரும் இங்கு சென்று சிவனை வழிபட்டார். அத்துடன் அவரும் ஒரு லிங்க பிரதிஷ்டை செய்தார். இங்கு துணிகளை வறியவர்களுக்கு தானம் செய்வது மகத்தான தானம்.
பலராமன் விவசாயத்தின் குறியீடாகவும் காணப்படுகிறார். நிலத்தின் மாண்பை காட்டும் ஏர் தான் அவரது ஆயுதம். லட்சுமணதீர்த்தத்தில் சங்கல்பத்துடன் நீராடும் கடமை ஆரம்பிக்கிறது. பின்னர் அங்கிருக்கும் பெரிய புளியமரத்தின் அருகில் சென்று முடி திருத்துவரிடம் முடிநீக்குதல் செய்ய வேண்டும். பின்னர் எள்ளும் நீரும் கொடுத்து முன்னோருக்கான கடனை செய்ய வேண்டும். பின் லட்சுமனேஸ்வரரை வழிபட வேண்டும். இதனால் தொழிலாளர்களுக்கும் வருமானம் வரும். லட்சுமணதீர்த்தத்தில் இந்த சடங்குகள் செய்யப்பட்டு முறையாக நீராடும் போது தான் சேது தீர்த்த யாத்திரையே உண்மையில் ஆரம்பிக்கிறது என்பது ஐதீகம்.