பதிவு செய்த நாள்
14
பிப்
2015
12:02
ஓசூர்:ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு செல்லும் பாதையில், பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட அபாயகரமான குழி மூடப்படாமல் உள்ளதால், அதை தாண்டி செல்லும் பக்தர்கள், குழிக்குள் விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர்.
ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சந்திரசூடேஸ்வர் கோவில் மிகவும் பழமையான கோவில் ஆகும். இங்கு, ஆண்டுதோறும் நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருவிழா சமயங்களில், விநாயகர் தேர் முன்னே செல்ல, அதைத்தொடர்ந்து வரும் சந்திரசூடேஸ்வரர் மற்றும் மரகதாம்பாள் வீற்றிருக்கும் தேர்கள் மீது, உப்பு, மிளகு, வாழைப்பழம் ஆகியவற்றை தூக்கி எரிந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.தேர்த்திருவிழா சமயங்களில், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் மட்டுமின்றி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள், முடி காணிக்கை மற்றும் அன்னதானம் வழங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா, வரும் மார்ச், 5ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, கடந்த, 2ம் தேதி, பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து, சந்திர சூடேஸ்வரர் கோவிலில் தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருவதால், ஓசூர் மட்டுமின்றி, கர்நாடகா பகுதியில் இருந்து கூட பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள், தங்களது வாகனத்திலேயே மலை மீது வரும் வகையில், சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து துவங்கும் இச்சாலையில், ஒரு மாதத்திற்கு முன், பல்வேறு பணிகளுக்காக குழி தோண்டப்பட்டது.ஆனால், இன்று வரை பணியை முடிக்காமல் இழுத்தடித்து வருவதால், வாகனங்களில் வரும் பக்தர்கள் மட்டுமின்றி, நடந்து செல்லும் பக்தர்களும் அபாயகரமான குழியை தாண்டி செல்ல வேண்டியுள்ளது. சில நேரங்களில், பக்தர்கள் சிலர் குழிக்குள் தவறி விழுந்து படுகாயம் அடையும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா ஏற்பாடுகள் நடந்து வரும், வேளையில், கோவிலுக்கு செல்லும் சாலை முன் தோண்டியுள்ள குழியை, உடனடியாக மூட வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.