பதிவு செய்த நாள்
02
மார்
2015
11:03
காரைக்கால்: காரைக்காலில் சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழாவில் ஏராளமான இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகள் நடந்தது. காரைக்கால் பாலசந்தர் சங்கீத வித்யாலயா அறக்கட்டளை சார்பில் 22ம் ஆண்டு சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா நேற்று காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் நடந்தது. காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், அதைத்தொடர்ந்து மயிலாடுதுறை ஞானகுரு பாகவதர் கோஷ்டியார் உஞ்சு விருத்தி,பஜனை நடந்தது. பின் காலை 9.30 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி துவங்கியது.காலை 10 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் நிகழ்ச்சியில் நாட்டக்குறிஞ்சி ராமலிங்கம், கலைமாமணி லிங்கம், ரங்கராஜன், இசை ஆசிரியர் சாய்கிருஷ்ணன், சுந்தர், தனலட்சுமி,காயத்திரி சுப்ரமணியன், மீனாட்சி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடினர். பகல் 12 மணிக்கு சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை நடந்தது. நிகழ்ச்சியில் பக்க வாத்திய கலைஞர்கள் வயலின் சிக்கல் பாலு, காரை சுக பாவலன், ஜெயகவுரி சாய்கிருஷ்ணன், மிருதங்கம் சிக்கல் வடிவேல், நகை ஸ்ரீராம், நாகபாலசுப்ரமணியன், தபேலா சரவணன், கடம் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய நல்லாசிரியர் நடராஜன், பாலசங்கீத வித்யாலயா டிரஸ்ட் பொறுப்பாளர்கள் சண்முகநாதன், முத்தரசி, அசோக்குமார் செய்திருந்தனர்.