பதிவு செய்த நாள்
04
மார்
2015
02:03
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவில் இன்று குண்டம் திருவிழா நடக்கிறது.
கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம், 17 ம் தேதி கொடிக் கம்பம் நடப்பட்டு, 15 நாள் நோன்பு சாட்டப்பட்டது. பக்தர்கள் தினமும், கொடிக் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு, 7:00 மணிக்கு, மாமாங்கம் ஆற்றியில் சக்தி விந்தையை ஆற்றில் இருந்து அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக பிளேக் மாரியம்மன் கோவிலுக்கு வந்து, மாவிளக்கு வைத்து வழிபாடு செய்தனர். காலை, 10:00 மணியளவில், 60 அடி நீளமும், மூன்று அடி அகலமும், ஒன்றேகால் அடி ஆழமுள்ள குண்டம் திறக்கப்பட்டது. பின், இரவு, 7:00 மணியளவில் குண்டத்திற்கு பூப்போடும் நிகழ்ச்சியை தொடர்ந்து, அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். மாமாங்கம் ஆற்றில் இருந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த, பூவோடு எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.
இன்று காலை, 6:00 மணிக்கு மாமாங்கம் ஆற்றில் சக்தி விந்தையை அழைத்து வருதல் நிகழ்ச்சி இடம் பெறுகிறது. குண்டம் இறங்கும் பக்தர்கள் உடன் ஊர்வலமாக ஆர்.எஸ்.ரோடு, திரு.வி.கா வீதி, விவேகானந்தர் வீதி வழியாக வந்து, பின் பொள்ளாச்சி-கோவை மெயின்ரோடு, ஆர்.எஸ்.ரோடு வழியாக கோவிலை காலை 8.00 மணிக்கு வந்தடைகின்றனர். அங்கு தயார் நிலையில் உள்ள குண்டத்தில் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.