பதிவு செய்த நாள்
08
மே
2015
12:05
பிரச்சனைகள் எல்லா விதத்திலும் வரும். மகான்களின் கருணையினால் இத்தகைய பிரச்சனைகள் தீர்க்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்ததுண்டு. ஒருமுறை திருவரங்கம் - திருவானைக்கோயிலுக்கு இடையே எல்லைப் பிரச்சனை எழுந்தது. அனைவரின் உள்ளங்களிலும் அபிப்பிராய பேதம். சாளுவ நரசிம்மன் என்ற மன்னனுடன் அங்கு வந்த வியாச தீர்த்தர் எனும் ஆசார்ய புருஷர் பிரச்சனை தீர வழி சொன்னார். குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஒருவர் மூச்சு விடாமல் ஓடத் தொடங்க வேண்டும். அவர் எங்கு மூச்சு விடுகின்றாரோ அதுவே எல்லை என்றார். இதை சாளுவ மன்னன் உட்பட அனைவரும் ஒப்புக் கொண்டனர். ஆனால் மற்றொரு பிரச்சனை எழுந்தது. யார் ஓடுவது என்பதில் கருத்து. வேறுபாடு எழுந்தது. முடிவில் நானே ஓடுகிறேன். என்றார் வியாச தீர்த்தார். அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். அரங்கநாதன் திருக்கோயிலிலிருந்து வியாச தீர்த்தர் ஓடத் துவங்கினார். ஒரு குறிப்பிட்ட எல்லை வந்ததும் நின்றார். அதுவே அரங்கநாதனின் எல்லையாக தீர்மானிக்கப்பட்டது. அந்த இடத்தில் ஒரு அனுமன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தார் வியாச தீர்த்தார். இந்த ஆசார்ய புருஷரே புகழ் பெற்ற வியாசராஜர் ஆவார். வியாச தீர்த்தராக இருந்தவர் வியாச ராஜர் ஆனதற்கும் வரலாறு உள்ளது....
கலிங்கப் போரில் வெற்றி பெற்ற அரசர் கிருஷ்ண தேவராயர் தலைநகர் திரும்பினார். அதுசமயம் அவரை அணுகிய அரண்மனை ஜோதிடர்கள் ஒரு சில நட்சத்திரங்களின் சேர்க்கையால் மன்னருக்கு ஆபத்து வரும். குறிப்பிட்ட நாளில் மரணம் நேரும் என்றார்கள். கிருஷ்ண தேவராயர் வியாச தீர்த்தரின் கால்களில் விழுந்தார். நடந்ததைக் கூறித் தப்பிக்க வழி என்ன கேட்டார். ஆலோசனை நடந்தது. அதன்படி, ஆபத்து நேர்வதாக இருந்த அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் வியாச தீர்த்தர் அரசராக இருப்பது என முடிவு செய்யப்பட்டது. அரசாட்சியை வியாச தீர்த்தரிடம் ஒப்படைத்தார் கிருஷ்ண தேவராயர். குறிப்பிட்ட நேரம் நெருங்கியது. சிம்மாசனம் காலியாக இருந்தது. வியாசதீர்த்தர் சிம்மாசனத்துக்குப் பூஜை செய்தார். தன்மேல் இருந்த காவி மேலாடையை எடுத்துச் சிம்மாசனத்தின் மீது எறிந்தார். பேரிரைச்சலுடன் அந்த ஆடை பளீச் சென்று தீப்பிடித்து எரிந்தது. அதன் சாம்பல் மட்டுமே எஞ்சியது. வரவிருந்த ஆபத்து நீங்கியது. அதன் பின், தான் வழிபட்டு வந்த தெய்வ வடிவத்தைச் சிம்மாசனத்தில் அமர்த்திய வியாசதீர்த்தர். தானும் சிம்மாசனத்தில் அமர்ந்தார். ஆபத்தை நீக்கிய ஆசார்ய புருஷர் கிருஷ்ண தேவராயரிடமே மீண்டும் பதவியைத் தந்து அவரையே அரசனாக்கினார். அன்று தொடங்கி வியாச தீர்த்தர், வியாசராஜர் எனப்பட்டார்.
வியாச ராஜரின் மகிமைகள் கணக்கில் அடங்காதவை சுல்தான் ஒருவரின் இறந்து புதைக்கப்பட்ட மகனை உயிர்ப்பித்தார். இந்த நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. டெல்லியில் வியாசராஜர் ஒரு மேடான பகுதியில் தங்கி இருந்தார். அந்த மேடு சுல்தான் பலுல்லோடியின் மகன் சமாதி என்று தெரிய வந்தது. தோண்டுங்கள் இதை என்றார் மகான். சமாதி தோண்டப்பட்டது. அதனுள் இருந்த சடலத்தின் மேல் கமண்டல நீரைத் தெளித்தார் வியாசராஜர், உடனே சுல்தான் மகன் உயிர் பெற்றான். மாண்டவன் மீண்டதைக் கண்ட சுல்தான் பலுல்லோடி மகிழ்ந்தான். யானை ஒட்டகம், ஏராளமான சன்மானங்கள் ஆகியவற்றுடன் வாத்தியங்கள் முழங்க வந்து வியாச ராஜருக்கு சமர்ப்பணம் செய்து வணங்கினான். இப்படி வியப்பில் ஆழ்த்தும் மகிமைகள் பல கொண்ட வியாச ராஜரின் அவதாரமும் வியக்கத்தக்கது. காவிரி நதியும் கபினி நதியும் கலக்கும் இடத்துக்கு அருகே உள்ள தலைக்காடு எனும் தலத்தின் ஒரு பகுதியாகத் திகழ்ந்த பன்னூரை ஆண்டு வந்தவர் வேங்கடகிரி நாயக், அவரிடம் அமைச்சராகப் பணி புரிந்தவர் ராமதேவர். உயர்ந்த கல்வியறிவு, தெளிவு பெற்ற சிந்தனை, நிர்வாகத்திறன் ஆகியவற்றில் தலை சிறந்து விளங்கியவர் ராமதேவர், இவரை பல் லண்ண சுமதி ராமாச்சார்யார் என் றெல்லாம் மக்கள் போற்றினர்.
ராமதேவரின் மனைவி சீதம்மா (லக்ஷமம்மா) என்றும் சொல்வார்கள். இந்தத் தம்பதியருக்கு பீமக்கா எனும் பெண் குழந்தை இருந்தது. அந்தத் தம்பதியினர் ஆண் குழந்தை ஒன்று வேண்டு மென தவம் இருந்தார்கள். அவர்களின் கனவில் வேதவியாசர் தோன்றி காவிரிக் கரைக்கு அருகில் ஒரு துறவி வருவார். அவரைச் சரண் அடையுங்கள் என்று சொல்லி மறைந்தார். நாட்கள் கடந்தன. ஒரு நாள் ராமதேவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் மயக்கம் அடைந்து விட்டார். அவர் இறந்து விட்டதாக அனைவரும் நினைத்தார்கள். சீதம்மா உடன் கட்டை ஏறத் தீர்மானித்தார். அந்தக் கால கட்டத்தில் உடன் கட்டை ஏறி உயிர் துறக்கும் பெண் யாராவது ஒரு பெரியவரிடம் ஆசி வாங்க வேண்டும். என்பது வழக்கத்தில் இருந்து வந்தது. அதன்படி, அப்போது அங்கு விஜயம் செய்திருந்த மகான் பிரமண்ய தீர்த்தர் என்பவரிடம் ஆசி பெறும்படி சீதம்மாவை மற்றவர்கள் அறிவுறுத்தினார்கள். சீதம்மா தாங்க முடியாத வேதனையுடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள அப்பூர் மடத்தின் தலைவரான பிரம்மண்ய தீர்த்தரை வணங்கினார்.
தீர்க்க சுமங்கலி பவ.... புத்ரவதீ பவ என்று ஆசிர்வாதம் செய்தார் மகான். சீதம்மாவைச் சுற்றி இருந்தவர்கள். திடுக்கிட்டார்கள். நடந்ததை மகானிடம் விவரித்து, ஸ்வாமி, கணவருடன் சேர்ந்து தானும் உயிர் துறக்க வேண்டும். என்பதற்காகவே இவள் தங்களிடம் ஆசி பெறவந்தாள். எனக் கூறினார்கள். அவர்களை பார்த்த மகான், சீத்தம்மாவின் வீட்டுக்குச் சென்றார். தன் கையில் வைத்திருந்த கமண்டல நீரை, ராமதேவர் உடம்பின் மீது தெளித்தார். வியப்புறும் வகையில் ராமதேவர் உயிர்த்தெழுந்தார். எழுந்தவர் மனைவியுடன் சேர்ந்து பலமுறை ஸ்வாமிகளை வணங்கினார். அவர்களுக்கு ஆசி கூறிய மகான் உங்களுக்குப் பிறக்கப் போகும் முதல் குழந்தையை மடத்துக்குத் தந்து விடுங்கள் அதன் பிறகு உங்களுக்கு மற்றோர் ஆண் குழந்தை பிறக்கும் என்றார். மகான் வாக்குப் பொய்க்குமா என்ன? சீதம்மாவுக்கு மணி வயிறு வாய்த்தது. குழந்தை பிறக்கப் போகும் நாளை அறிந்த பிரம்மண்ய தீர்த்தர் மடத்தில் இருந்து ஒரு தங்கக் தட்டைக் கொடுத்தனுப்பி குழந்தை பூமியில் படாமல் (பூ ஸ்பரிசம்) பிறக்க வழி செய்தார். அதன்படி, பிறந்த குழந்தை பூமியைத் தொடாமல் தங்கத் தட்டில் ஏந்தப்பட்டது. ஏற்கெனவே வாக்களித்தபடி குழந்தையை மடத்துக்கு அனுப்பி வைத்தார்கள். (பிரபவ வருடம் வைகாசி மாதம் அவதரித்தது அந்தக் குழந்தை) அங்கே சுவாமிக்கு அபிஷேகம் செய்த பாலை உண்டு வளர்ந்தது குழந்தை. யதிராஜன் என்று பெயரிட்டார்கள். ஸ்வாமிகளின் நேரடிப் பார்வையில் வளர்ந்த யதிராஜனுக்கு ஐந்து வயதாகியது. உபநயனம் செய்தார்கள். ஏழாவது வயதில் யதிராஜனுக்கு சந்நியாச தீட்சை தந்து வியாச தீர்த்தர் என்ற திருநாமம் சூட்டினார். பிரம்மண்ய தீர்த்தர். இந்த வியாசதீர்த்தர்தான் கிருஷ்ண தேவராயரைக் காப்பாற்றியவர். அதன் காரணமாக வியாசராஜர் என அழைக்கப்பட்டார்.