பதிவு செய்த நாள்
18
மே
2015
12:05
ப.வேலூர் : பொத்தனூர் மாரியம்மன் கோவிலில், நாளை (மே,19) தேதி, குண்டம் இறங்கும் விழா கோலாகலமாக நடக்கிறது. ப.வேலூர் அடுத்த, பொத்தனூரில், மகா மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 3ம் தேதி கிராம சாந்தி, கம்பம் நட்டு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, பூச்சோரிதல், மறுகாப்பு கட்டுதலும் நடந்தது. தினமும், ஸ்வாமி, சிம்மம், ரிஷபம், அன்னபட்சி, பூதகி, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று இரவு, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. இன்று, (மே, 18) அதிகாலை, 4.30 மணி முதல், 6 மணிக்குள், ஸ்வாமி ரதம் ஏறுதல் நிகழ்ச்சியும், மாலை, 4 மணிக்கு திருத்தேரில் ஸ்வாமி புறப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை (மே, 19) காலை, 6 மணிக்கு பூக்குழி பூஜை நடக்கிறது. மதியம், 1 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு செல்லும் பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக வந்து, கோவில் முன் ஏற்படுத்தப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதேபோல், பெண்கள் தலையில் பூவாரி போட்டு, ஸ்வாமிக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். 20ம் தேதி காலை, 7 மணிக்கு பொங்கல், மாவிளக்கு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, காலை, 9 மணிக்கு, பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தியும், அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். 21ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு கம்பம் பிடுங்குதல், கிடாவெட்டு நிகழ்ச்சியும், மே, 22ம் தேதி காலை, 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை ஆடும் பல்லக்கில் ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.