குருநாதரான யாதவப்பிரகாசருக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார் சீடர் ராமானுஜர். அப்போது, ராமானுஜரின் கண்களில் வழிந்த கண்ணீர், கன்னத்தில் வழிந்தோடி குருநாதரின் தோளில் சிந்தியது. நிமிர்ந்து பார்த்த குரு,ராமானுஜா! ஏன் அழுகிறாய்? என்று கேட்டார்.நீங்கள் விஷ்ணுவின் கண்ணழகை வர்ணிக்கும், கப்யாஸம் என்ற பதத்திற்கு குரங்கின் ஆசனவாய் போல சிவந்த கண்கள் என பொருள் சொன்னீர்கள். போயும், போயும் இப்படியா பொருள் சொல்வீர்கள்! அதை எண்ணியதும் மிகுந்த வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தி விட்டேன், என்றார் ராமானுஜர்.குருநாதர் அலட்சியத்துடன், ஒரு வார்த்தைக்குஉரிய பொருளை உள்ளது உள்ளபடி தானே சொல்ல முடியும். உனக்கு வேறு பொருள் தெரிந்தால் சொல்... பார்க்கலாம் என்றார்.குருவே! கப்யாஸம் என்பதை கபி ஆஸம் என்று பிரித்துப் பார்த்தால், பொருள் எளிதாகப் புரியும். கபி என்றால் சூரியன் என்றும், ஆஸம் என்றால் மலர்ந்த என்றும் பொருள் உண்டு. சூரியனால் மலர்வது தாமரை. அதனால், தாமரை போல சிவந்த கண்கள் என்பதே இங்கே பொருத்தமானது என்றார் ராமானுஜர். ஒரு சொல்லுக்கு பலபொருள் இருக்கும் போது, உயர்ந்த பொருளை எடுத்துக் கொள்வதே உயர்ந்தது. அதிலும், தெய்வங்கள் குறித்த சொற்களுக்கு மிக மிக உயர்ந்த பொருளையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.