மகாவிஷ்ணுவின் திருமேனி கார்மேகம் போல கருமை நிறம் கொண்டது. ஆனால், இரண்டு கண்கள் மட்டும் தாமரை மலர் போல சிவந்திருக்கின்றன. இதனை திருப்பாவை பாசுரத்தில் ஆண்டாள், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் என்று குறிப்பிடுகிறாள். கிருஷ்ணாவதாரத்தில் மட்டுமல்ல, பெருமாள் எந்த அவதாரம் எடுத்தாலும் அவருடைய கண்கள் அகன்றதாகவே இருக்கும். மந்த்ரராஜ பத ஸ்தோத்திரத்தில், நரசிம்ம மூர்த்தியை, விருத்தோத்புல்ல விசாலாட்சம் என்று குறிப்பிடுகின்றனர். எத்தனை பக்தர்கள் வந்தாலும் தாயுள்ளத்தோடு அருட்பார்வை செலுத்தும் கண்கள் என்று இதற்கு பொருள். திருமாலின் கண்கள் விசாலமாக இருக்கின்றன. பாசுரத்தில் குறிப்பிடும், செங்கண் என்பதற்கு செவ்வரி ஓடிய சிவந்த கண், விசாலமான கண், அருள்புரியும் கண் என்று பொருள்.