பதிவு செய்த நாள்
06
ஜூலை
2015
11:07
கொச்சி: மதுரை சித்திரை திருவிழா, காஷ்மீர் அமர்நாத் யாத்திரை போன்ற பிரசித்தி பெற்ற திருவிழாக்களில், துாய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு பொறுப்பேற்றபின், அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், வீதிகள் ஆகியவற்றை துாய்மையாக வைத்து கொள்வதற்காக, துாய்மை இந்தியா திட்டம் துவக்கப்பட்டது. அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர், நடிகையர், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை, செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, குடிநீர் மற்றும் துாய்மை துறைக்கான மத்திய அமைச்சகம் சார்பில், மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள தாவது:துாய்மை இந்தியா திட்டத்தை நாடு முழுவதும் உள்ள மக்களிடம் பிரபலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மக்கள் அதிகம் திரளும் முக்கிய திருவிழாக்களில், இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா, காஷ்மீரில் நடக்கும் அமர்நாத் யாத்திரை, ஒடிசா மாநிலம் புரி ஜெகநாதர் கோவிலில் நடக்கும் தேர் திருவிழா, வட மாநிலங்களில் நடக்கும் கும்ப மேளாக்கள் உள்ளிட்ட திருவிழாக்களில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். இந்த திருவிழாக்களின்போது, ஒரே இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரளுவர். அவர்களிடம் இந்த திட்டத்தை பிரபலப்படுத்தினால், அதற்கு நல்ல பலன் கிடைக்கும். 2019க்குள் இந்தியாவை முற்றிலும் துாய்மைப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். அந்த இலக்கை எட்டுவதற்காக இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.