பதிவு செய்த நாள்
24
ஆக
2015
11:08
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வரும், 26ம் தேதி துவங்கி செப்டம்பர், 3ம் தேதி வரை பவித்ரோத்ஸவம் விழா நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாத் கோவிலில், ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பவித்ரோத்ஸவம் விழா நடக்கும். இந்தாண்டு, பவித்ரோத்ஸவம் விழா வரும் 26ம் தேதி துவங்குகிறது. முதல் நாளான 26ம் தேதி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை, 9.15 மணிக்கு புறப்பட்டு, 9.45 மணிக்கு யாகசாலை சென்றடைகிறார். 10.30 மணிக்கு திருவாராதனம் கண்டருள்கிறார். மாலை, 5 மணி முதல், 6.30 மணிவரை திருமஞ்சனமும் பிறகு அலங்காரமும் கண்டருள்கிறார். இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
வரும், 27ம் தேதி பூச்சாண்டி சேவை நடக்கிறது. இதற்காக யாகசாலை திருவாராதனம் காலை, 7 மணிக்கு தொடங்குகிறது. மூலஸ்தான திருவாராதனம் காலை, 10 மணிக்கு நடக்கிறது. மதியம், 2 மணி முதல் மாலை, 6 மணி வரை மூலவருக்கு நூல்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு பூச்சாண்டி சேவையில் நம்பெருமாள் அருள்பாலிக்க உள்ளார். இரவு, 8 மணிக்கு மேல் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, 8.15 மணிக்கு திருபவித்ரோத்சவ மண்டபம் வந்து சேருகிறார். அங்கு அலங்காரம் கண்டருளி, 8.45 மணிக்கு புறப்பட்டு இரவு, 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். மூன்றாம் திருநாளான, 28ம் தேதி தொடங்கி, 6ம் திருநாளான, 31ம் தேதி வரை நம்பெருமாள் மாலை, 6 மணிக்கு பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருள்கிறார். 7ம் திருநாளான செப்டம்பர், 1ம் தேதி நெல் அளவு கண்டருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் திருநாளான, 2ம் தேதி மாலை, 6 மணிக்கு பிவித்ரோத்சவ மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருள்கிறார். 9ம் திருநாளான, 3ம் தேதி நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.