பதிவு செய்த நாள்
28
செப்
2015
11:09
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த, ஏத்தாப்பூர் அபிநவம் கிராமத்தில், மழை வேண்டி, 27 கன்னிப்பெண்களை கொண்டு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தும், அரசு வேம்புக்கு திருமணம் செய்தும், வருண பகவானுக்கு கூழ் ஊற்றியும், நூதன பூஜை வழிபாடு நடந்தது. வாழப்பாடி பகுதியில், கடந்த மூன்று ஆண்டாக பருவமழை பொய்த்து வறட்சி நிலவுகிறது. அதனால், விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். பல கிராமங்களில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, மழையை வரவழைக்க, பல்வேறு நூதன பூஜைகளையும், வழிபாடுகளையும் கிராம மக்கள் நடத்தி வருகின்றனர். வாழப்பாடி அடுத்த, ஏத்தாப்பூர் அபிநவம் கிராமத்தில் குன்டுமணியான் கரடு பகுதியில், 37 ஆண்டுகள் பழமையான அரசு -வேம்பு விநாயகர் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலில், மழை வேண்டி நேற்று காலை சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. 27 கன்னிப்பெண்களை வசிஷ்ட நதிக்கு அழைத்து சென்று, அவர்களை புனித நீர் சுமக்க செய்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த புனித நீரை ஸ்வாமிக்கும், அரசு வேம்புக்கும் ஊற்றி சிறப்பு அபி?ஷக ஆராதனை செய்யப்பட்டது. பின்னர், அரசு -வேம்பு திருமணமும், வருண பகவானை வேண்டி கூழ் ஊற்றி சிறப்பு பூஜை வழிபாடும் நடந்தது.