பதிவு செய்த நாள்
01
மே
2026
10:05
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் வெண்பட்டு உடுத்தி இறங்கினார்.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மதுரை அழகர் கோவிலுக்கு இணையாக வருடம் முழுவதும் அனைத்து விழாக்களும் நடக்கிறது. தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்., 26 காப்பு கட்டப்பட்டு துவங்கியது. தினமும் யாகசாலை பூஜைகள் நடந்து நேற்று காலை கும்பத் திருமஞ்சனம் நிறைவடைந்தது.பக்தர்கள் மாவிளக்கு வைத்து வழிபட்டனர். கருப்பணசாமி வேடமடைந்த சாமி அடிகள் மேள தாளத்துடன் தரிசனம் செய்தனர்.
நேற்று இரவு 1:30 மணிக்கு கள்ளழகர் கோடாரி கொண்டையிட்டு தங்க நெல்மணி தோரணங்கள் சூடி, ஈட்டி, வளரி, கத்தி, வாள், கேடயம், தடி ஏந்தி அருள்பாலித்தார். மகா தீப ஆராதனைகள் நடந்து பூ பல்லக்கில் அமர்ந்தார். சீர்பாதம் தாங்கிகள் பல்லக்கை சுமந்த நிலையில் பெருமாள் கோயிலை விட்டு காவல் தெய்வம் கருப்பண்ணசாமியிடம் விடைபெறும் நிகழ்வு நடந்தது. அப்போது ஏராளமான தீவட்டிகள் வெளிச்சத்தில் மேளதாளம் முழங்க பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணதிர ஆடி அசைந்து சென்றார்.அப்போது வெண்பட்டு உடுத்தி வெள்ளி கிண்ணத்தில் பால் பாயாசம் சாப்பிட்டபடி அழகர் வைகை ஆற்றை நோக்கி கிளம்பினார். இதனால் நல்ல மழை பெய்து சுபிட்சத்துடன் விளங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி அதிகாலை 3:00 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கிய அழகருக்கு பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர். பின்னர் ஆற்றில் உள்ள மண்டகப் படிகளில் சேவை சாதித்தபடி தல்லாகுளம் மண்டகப் படியை அடைந்தார். மாவட்ட எஸ்.பி., சந்திஸ், பரமக்குடி டி.எஸ்.பி., ஜெபராஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காலை 9:30 மணிக்கு கள்ளழகர் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி தல்லாகுளத்தில் இருந்து புறப்பட்டார்.
அப்போது பல்லாயிரம் பக்தர்கள் துருத்தி மூலம் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து அழகரை வரவேற்றனர். தொடர்ந்து காட்டு பரமக்குடி, மஞ்சள் பட்டணம் மண்டகப் படிகளில் எழுந்தருளி, மதியம் ஆயிரம் பொன் சப்பரத்தை அடைந்தார். அங்கு சப்பரத்தில் அமர்ந்த அழகரை ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் மணலில் இழுத்து சென்றனர். மேலும் பரமக்குடியில் முக்கிய வீதிகளில் வலம் வந்த அழகர், எமனேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று இரவு வண்டியூர் எனும் காக்கா தோப்பு பெருமாள் கோயிலை அடைந்தார். வழி நெடுகிலும் நீர் மோர் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இன்று சேஷ வாகனத்தில் அழகர் எழுந்தருளி மண்டூக மகரிஷிப்பை சாப விமோசனம் மற்றும் தசாவதார சேவை நடக்கிறது. சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி ரெங்காச்சாரி, டிரசரர் நீலகண்டன், டிரஸ்டிகள் ரமேஷ்பாபு, கிரிதரன், கோவிந்தன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.