பதிவு செய்த நாள்
14
ஜன
2016
10:01
சபரிமலை:மகரவிளக்கு நாளில், ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பவனி, பந்தளத்திலிருந்து நேற்று புறப்பட்டது. நாளை அதிகாலை, 1:27 மணிக்கு, மகர சங்கரம பூஜை நடக்கிறது. சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. நாளை மாலை மகரவிளக்கு பெருவிழாவும், பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. இதற்காக, நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
தீபாராதனை:மகரவிளக்கு நாளில், பந்தளம் அரண்மனையில் இருந்து கொடுக்கப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். பந்தளம் அரண்மனையில், ஐயப்பன் வளர்ந்ததாகவும், சபரிமலை சென்ற பின் ஐயப்பனை பந்தளம் மன்னர் காண சென்றதாகவும், அவ்வாறு செல்லும் போது ஆபரணங்களுடன் சென்றதாகவும், அதை நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பந்தளம் மன்னர் பிரதிநிதியுடன் திருவாபரண பவனி சபரி மலை வருவதாகவும் வரலாறு கூறுகிறது. பந்தளம் மன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட மரணத்தை தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான திருவாபரண பவனி நேற்று பந்தளம் புத்தன் மேடை கொட்டார திருமுற்றத்தில் கட்டப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட பந்தலில் இருந்து புறப்பட்டது.இங்கு திருவாபரண பெட்டி திறக்கப்படவில்லை. காலை, 6:00 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
பகல், 12:30 மணிக்கு பவனி புறப்படுவதற்கான சடங்குகள் துவங்கியது. இந்த நேரத்தில் ஆகாயத்தில் கருடன் வட்டமிட, சரணகோஷங்கள் முழங்க, திருவாபரண பவனி புறப்பட்டது. முக்கிய திருவாபரண பெட்டியை குருசாமி கங்காதரன் தலையில் சுமந்து வந்தார். பூஜா பாத்திரங்கள் அடங்கிய பெட்டியை சிவன்பிள்ளையும், கொடி பெட்டியை பிரதாபசந்திரனும் சுமந்து வந்தனர். மொத்தம், 23 பேர் அடங்கிய குழுவினர் இந்த பெட்டிகளை சுமந்து வருவர். நேற்று ஐரூர் புதியக்காவு தேவி கோவிலில் இந்த பவனி தங்கியது.
போலீசார் பாதுகாப்பு: காட்டுப்பாதையில் திருவாபரணங்கள் செல்வதால், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக கூடவே வருகின்றனர்.மகரவிளக்குக்கு முன்னோடியாக நடைபெறும் சுத்திகிரியைகள் சன்னிதானத்தில் தொடங்கியது. நேற்று மாலையில் தீபாராதனைக்கு பின், பிரசாத சுத்தி கிரியைகள் நடைபெற்றது. பிம்பசுத்தி பூஜைகள் இன்று மதியம் உச்ச பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் என்றும், இந்த பூஜைகளுக்கு பின், ஐயப்பனின் விக்ரகத்தில் கலசாபிஷேகம் நடைபெறும் என்றும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு கூறினார். இன்று மாலை, 6:00 மணிக்கு பின்னர் பம்பையில், பம்பை விளக்கு நிகழ்ச்சி நடைபெறும்மூங்கில் கம்புகளின் கோபுரங்கள் வடிவமைத்து அதில் விளக்குகள் ஏற்றி பம்பை ஆற்றில் சரண கோஷத்துடன் மிதக்க விடுவர். மகர சங்கரம பூஜை: சூரியன் தனுசு ராசியில் இருந்து, மகர ராசியில் கடக்கும் நேரத்தில் சபரிமலையில் நடைபெறும் விசேஷ பூஜைதான் மகர சங்கரம பூஜை. இந்த ஆண்டு, இந்த பூஜை நாளை அதிகாலை, 1:27 மணிக்கு நடக்கிறது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்படும். இதற்காக, நாளை அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு இரண்டு மணிக்கு அடைக்கப்படும்.