பதிவு செய்த நாள்
18
ஜன
2016
12:01
சரவணம்பட்டி: மனதுக்குப்பிடித்த மணமகன் கிடைக்க வேண்டி, பூப்பறிக்கும் விழா, சரவணம்பட்டி அருகே கரட்டுமேட்டில் நடந்தது. கோவை சரவணம்பட்டி அருகே ரத்தினகிரி மலை என்றழைக்குப்படும் கரட்டுமேடு உள்ளது. இங்குள்ள குமரக்கடவுள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளில், சூரிய வழிபாடு, பொங்கல் வைத்தல், கோமாதா பூஜைகள் நடந்தன. இரண்டாவது நாளில் அலங்கார அபிஷேக பூஜை, தீபாராதனைகள் நடந்தன. 200 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்தி பெற்ற இக்கோவிலில், மாட்டுப்பொங்கலன்று பூப்பறிக்கும் விழா நடந்தது. குரும்பபாளையம், கீரணத்தம், கோவில்பாளையம் உள்ளிட்ட, எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் மக்கள் பூப்பறிக்கும் விழாவில் பங்கேற்கின்றனர். இந்த மலைப்பகுதியில் உள்ள ஆவாரம்பூக்களை பெண்கள் பறித்து குமரக்கடவுளை வழிபட்டால், மனதுக்கு பிடித்த மாப்பிள்ளை கிடைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது, இந்த மலைப்பகுதியில் ஆவாரம்பூக்கள் மிகவும் குறைவாக உள்ளது. முட்செடிகளும், மரங்களும் வளர்ந்துள்ளன. அதோடு, கோவிலுக்கு வரும் கூட்டமும் அதிகமானதால், பூப்பறிக்கும் விழா பெயரளவிலேயே நடக்கிறது.