பதிவு செய்த நாள்
13
பிப்
2016
02:02
பழநி: பழநி மலைக்கோயிலில் மூலவர் முன் அமர்ந்து தரிசனம் செய்யவும், வி.ஐ.பி., பாஸ்
வழங்கவும் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பழநி மலைக்கோயிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்தரம் போன்ற முக்கிய விழாக்காலங்கள்
மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்களில்
முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு அடிப்படையில் கோயில் தங்கும் விடுதியில் 5 நபர் வரை
தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கி பாஸ் வழங்கப்பட்டது. இதேபோலவே முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மூலவர் முன் அமர்ந்து தரிசனம் செய்ய
அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இவற்றை சிலர் தவறாக பயன்படுத்துவதாக கோயில் நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதனால் இரண்டு நபர்களுக்குமேல் வி.ஐ.பி., பாஸ் வழங்கக் கூடாது. உயர் அதிகாரிகள் அனுமதி இல்லாமல் மூலவர் முன் அமர்வு தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது போன்ற புதியகட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மூலவர் சன்னதியில் ஆறுகால கட்டளை பூஜையில் வழக்கம்போல் பக்தர்கள் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பிறநேரங்களில் முறையில்லாமல் பலரை அமர வைப்பதால் பிறபக்தர்கள் தரிசனம் செய்ய இடையூறு, காலதாமதம் ஏற்படுகிறது.வி.ஐ.பி.,பாஸ் மட்டும் சாதாரண நாட்களில் நுாற்றுக்குமேலும், விழாக்காலங்களில் ஆயிரத்திற்கு மேலும் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக புகார் வருவதால் அமர்வு தரிசனம், பாஸ் வழங்குவதை வரன்முறைப் படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன,” என்றார்.