பதிவு செய்த நாள்
22
பிப்
2016
03:02
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு சுவாமி சுயம்பு வடிவில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அக்காலத்தில் இப்பகுதிகளில் அடர்ந்த காரை மரங்கள், அதிகம் வளர்ந்திருந்தன. அதனால், மக்கள் இங்கு ஆடு, மாடுகளை வளர்த்து வந்தனர். காரை வனம் என அழைக்கப்பட்டு, நாளடைவில் காரமடை என, மருவியது.தொட்டியன் ஒருவன் காராம் பசுமாடுகளை வளர்த்து
வந்தான். ஒரு மாட்டின் மடியில் மட்டும், பால் இல்லாமல் இருந்து வந்தது. ஒரு நாள் காரை
வனத்தில் மேய்ந்து கொண்டிருந்த அந்த காராம்பசு, ஒரு புதர் அருகே சென்றது.
அந்த மாட்டை பின் தொடர்ந்து சென்ற தொட்டியன், அங்கு நடந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தான். அந்த காராம் பசு, புதர் மீது தானாகவே பாலை சொரிந்து கொண்டிருந்தது. அங்கு என்ன உள்ளது என்பதை பார்க்க, தான் வைத்திருந்த அரிவாளால் புதரை வெட்டினான். அப்போது, அங்கிருந்து ரத்தம் பீறிட்டு வந்ததை பார்த்த, தொட்டியன் மூர்ச்சையாகி விழுந்தான்.
இரவு நெடுநேரமாகியும் தொட்டியன் வீடு திரும்பாததால், ஊர் பொதுமக்கள், கையில்
தீப்பந்தங்களுடனும், தண்ணீர் நிரப்பிய தோல் பைகளுடனும், தொட்டியனை தேடினர். புதர் அருகே தொட்டியன் மயங்கிக் கிடப்பதையும், அங்கு ரத்தம் தேங்கியிருந்ததையும் பார்த்தனர். புதரை அகற்றி பார்த்த போது, ஒரு கல்லில் ரத்தம் வடிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கிருந்த ஒருவருக்கு அருள் வந்து, சுயம்பு வடிவில் பெருமாள் காட்சி அளிப்பதாக கூறினார்.
உடனே அங்கிருந்தவர்கள் தோல் பையில் இருந்த தண்ணீரால், கல்லை சுத்தம் செய்த போது,
அரங்கன் சுவாமி, சங்கு, சக்கரத்துடன் காட்சி தந்துள்ளார்.தீப்பந்தங்களை ஏந்தி பழம், தேன்,
கற்கண்டு, சர்க்கரை, தேங்காய் ஆகியவற்றை பகவானுக்கு படைத்து, ரங்கா பராக், கோவிந்தா
பராக் என கூறி வழிபட்டு, ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளனர். பின்னர், ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து, அரங்கனுக்கு கோவில் கட்டி வழிபட்டு வந்தனர். மன்னர் திருமலை நாயக்கர், கடுமையான நோயால் அவதிப்பட்டு வந்தார். அரங்கநாதர் கோவில் ஸ்தல விருட்சமாக உள்ள, காரைமர இலைகளை வைத்து கட்டியபின், மன்னர் குணமடைந்தார். அதனால், தெப்பக்குளம், கல்யாண மண்டபம், கோவிலை சுற்றியும் மதில் சுவர், பரிவேட்டை மண்டபம் ஆகியவற்றை மன்னர் கட்டியதோடு, தேரையும் செய்து கொடுத்துள்ளார். அதனால் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று, தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. தேரோட்டம் முடிந்த அடுத்த நாள், பக்தர்கள் தோல் பையில் தெப்பக்குளத்தில் இருந்து தண்ணீரை மொண்டு வந்து, சுவாமி மீது ஊற்றி வழிபடுவர்.தாரை, தப்பட்டை முழங்க பக்தர்கள் தீப்பந்தங்களை ஏந்தி வந்து, ரங்கா பராக், கோவிந்தா பராக் என, ஆடிப்பாடி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இவ்வளவு சிறப்பு மிக்க காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டம், இன்று பிற்பகல், 3:30 மணிக்கு நடைபெற உள்ளது.