பதிவு செய்த நாள்
23
பிப்
2016
02:02
மைசூரு: திருமகூடுலு நரசிபுரா கும்ப மேளாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர். தமிழகம், கும்பகோணம் மகாமகத்தை போன்று, கர்நாடகாவின் கும்ப மேளா என கருதப்படும், மைசூரு மாவட்டம், திருமகூடுலு நரசிபுராவில், நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியது.
காவிரி, கபிலா, ஸ்படிகா சரோவரா நதிகள் சங்கமிக்கும் இடம், திரிவேணி சங்கமம் என்று
அழைக்கப்படுகிறது. உஜ்ஜயின், நாசிக், ஹரிதுவார், அலகாபாத் போன்ற இடங்களில், 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கும்ப மேளாவில் கலந்து கொள்ள முடியாத கர்நாடக பக்தர்கள் வசதிக்காக, திருமகூடுலு பகுதியில், கும்ப மேளா நடத்த தீர்மானித்ததாக கூறப்படுகிறது. தற்போதைய கும்பமேளாவில், கர்நாடகா மட்டுமின்றி, பல்வேறு மாநிலத்தவரும் புனித நீராடினர். வாரணாசியில் நடப்பது போன்று, இங்கும் கங்கா பூஜை நடத்தப்பட்டது. மூன்று நாள் கும்ப மேளாவில், ஸ்ரீநிர்மலானந்தா சுவாமிகள், ஸ்ரீசிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகள், ஸ்ரீமுக்திதானந்தஜி சுவாமிகள் உட்பட, மாநிலத்தின் பல்வேறு மடாதிபதிகள் புனித நீராடினர். பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில், நேற்று புனித நீராடினர். பின், அருகிலுள்ள அகஸ்தீஸ்வரர் கோவில், குஞ்ஜா நரசிம்மசாமி கோவில், சவுடேஸ்வரி கோவில்களுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்தனர்.