பதிவு செய்த நாள்
23
பிப்
2016
02:02
பரமக்குடி: மாசி மகாமகத்தையொட்டி பரமக்குடி வைகை ஆற்றில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மாசி மகாமகத்தின்போது பரமக்குடி வைகை ஆற்றின் படித்துறையில் சுவாமிகளுக்குதீர்த்தவாரி நடப்பது வழக்கம். நேற்று காலை 6 மணிக்கு தீர்த்தவாரிக்காக சுந்தரராஜப் பெருமாள், விசாலாட்சிஅம்பிகா சமேத சந்திரசேகரசுவாமி, சுப்பிரமணிய சுவாமி, மீனாட்சிசமேத சுந்தரேஸ்வரர், முத்தாலம்மன், எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் உள்ளிட்ட சுவாமிகள் வைகை ஆற்றில் எழுந்தருளினர். ஹோமம், பூர்ணாகுதிக்குப் பின் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வேல், சூலாயுதத்துடன் சக்கரத்தாழ்வார், அஸ்திரத்தேவர் சுவாமி விக்ரகங்களை அர்ச்சகர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் எடுத்துசென்று ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி கண்டனர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இதுபோன்று எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில் எதிரில் உள்ள மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இரவு 7மணிக்கு பெருமாள் கருட வாகனத்திலும், சிவன் கோயிலில் பஞ்சமூர்த்திகள் வீதிவலம்வந்தனர்.
உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. கோயில் அருகில் உள்ள அக்னிதீர்த்த குளத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடிய பின் பழமை வாய்ந்த சகஸ்ர லிங்கத்தை வலம்வந்து தரிசித்தனர். கோயிலின் அனைத்து சன்னதிகளிலும், நெய் விளக்கேற்றி, சிவநாம அர்ச்சனை, சக்தி ஸ்தோத்திரம் பாடினர். ஸ்படிக லிங்கம், மரகத லிங்கத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.