பதிவு செய்த நாள்
23
பிப்
2016
02:02
திருப்பதி: ஆந்திர மாநிலம், காளஹஸ்தி கோவிலில் நடைபெற உள்ள, பிரம்மோற்சவத்தின் போது, 20 ஆண்டுகளுக்கு பின், உற்சவ மூர்த்திகளை தங்க நகைகளால், அலங்கரிக்க உள்ளனர்.ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், காளஹஸ்தியில் உள்ள, காளஹஸ்தீஸ்வரர் கோவில், மிகப் பழமையானது. இக்கோவில், பஞ்ச பூத தலங்களில் ஒன்று என்பதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.
ஆந்திராவை ஆண்ட மன்னர்கள், ஜமீன்தார்கள், செல்வந்தர்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை, இக்கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர். அந்த நகைகளை பிரம்மோற்சவம், மகா சிவாராத்திரி போன்ற உற்சவ சமயத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு அணிவித்து வந்தனர்.பின், ஆந்திர மாநில அறநிலையத்துறை, அந்த தங்க நகைகளை கையகப்படுத்தி, வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளது.
உற்சவ சமயத்தில் மட்டும் இவற்றை எடுத்து, உற்சவ மூர்த்திகளுக்குஅலங்கரிப்பர்.
கோவில் செயல் அதிகாரிகளின் பதவி மாற்றம் காரணமாக, 20 ஆண்டுகளுக்கு முன், வங்கி
பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட தங்க நகைகளை கோவிலுக்கு கொண்டு வருவதில்
சிக்கல் ஏற்பட்டது. நகைகளின் பாதுகாப்பிற்கு எந்த செயல் அதிகாரியும் பொறுப்பேற்க முன்
வரவில்லை.அதனால், வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது, நான்கு அல்லது ஐந்து தங்க
நகைகளை மட்டும் வங்கியில் இருந்து எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். தற்போது, கோவில் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள பிரம்ம ராம்பா, கோவில் அறங்காவலர் குழு, ஆந்திர அறநிலைத்துறையுடன் பேசி, மார்ச், 7ம் தேதி மகா சிவாரத்திரியை ஒட்டி நடைபெற உள்ள பிரம்மோற்சவத்தின் போது, வங்கியில் உள்ள நகைகளை முழுமையாக
பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.