திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் நீராட... மீன் குத்தகை தவிர்க்கப்படுமா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29பிப் 2016 11:02
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையின் சுகாதாரத்தை காக்க மீன் குத்தகை தவிர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள சரவணப் பொய்கை, கிரிவலம் செல்லும் பாதையில் உள்ளது. மழை பெய்தால் மட்டுமே நிரம்பும். தண்ணீரை வெளியேற்றவோ, கொண்டு வரவோ வசதி இல்லை. பொய்கையை அப்பகுதியினர் துணி துவைக்கவும், குளிக்கவும் பயன்படுத்துகின்றனர். அந்த அசுத்தங்களை மீன்கள் சாப்பிடுவதால், பொய்கை சுகாதாரமாக உள்ளது. சரவணப் பொய்கையில் சில ஆண்டுளாக மீன் குத்தகை விடப்படவில்லை. தற்போது மீண்டும் விடப்பட்டுள்ளதால், தண்ணீரை கலக்கி மீன் பிடிக்கின்றனர். அனைத்து மீன்களையும் பிடித்துவிட்டால் அசுத்தங்கள் சேர்ந்து சுகாதாரக்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசும். குளிப்பவர்களுக்கு தோல் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மீன் குத்தகையை ரத்து செய்து பொய்கை தண்ணீர் துாய்மையாக இருக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.