பதிவு செய்த நாள்
18
மே
2016
04:05
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு கொட்டும் மழையில் 5 தேர் திருவிழாவில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுந்தனர்.
காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்ச விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 5ம் தேதி முதல் 6ம் தேதி வரை விநாயகர் உற்சவமும், 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை சுப்ரமணியர் உற்சவம், கடந்த 11ம் தேதி அடியார்க்கு நால்வர் புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடந்தது. கடந்த 12ம் தேதி செண்பகதியாகராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று(மே.17ல்) தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.
அதைத்தொடர்ந்து திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் ஆண்டுதோறும் செண்பகத் தியாகராஜர், நிலோத்தம்பாள் ஆகிய இரு தேர்திருவிழா நடைபெற்றது.கடந்த ஆண்டு புதிதாக வினாயகர், முருகன், சண்டியோஸ்வர் ஆகிய மூன்று தேர்கள் கொண்டு 5 தேர் திருவிழா நடந்தது. தேர்திருவிழாவை அமைச்சர் சிவா,கலெக்டர் சத்யேந்திரசிங், சீனியர் எஸ்.பி.,ஏ.கே.,கவாஸ்,கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் பலர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.தேர் தெற்கு வீதியில் புறப்பட்டு வடக்கு,மேற்குவீதி வழியாக நிலைக்கு வந்தடைந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் தியாகராஜா தியாகராஜா கோஷங்கள் முழுங்க 5 தேர்களை கொட்டு மழையில் பக்தர்கள் வடம் பிடித்து இழுந்தனர்.மேலும் இன்று சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதியுலா நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.