திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள குரு கோவில்களில், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர் அடுத்த பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில் வியாழக்கிழமையான நேற்று காலை, 10:00 மணியளவில், குரு பகவானுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில், சிவா விஷ்ணு கோவில்களில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடந்தது. மேலும் மணவாள நகரில் உள்ள மங்களீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து வழிபட்டனர்.