மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2016 04:08
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று இரவு நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் செய்தனர். இரவு 11 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தை துவங்கினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளியதும், கூடி இருந்த பக்தர்கள் கற்பூர தீபமேற்றி அம்மனை வழிபட்டனர்.
நுாற்றுக்கணக்கானாவர்கள் சாமி வந்து ஆடினர். கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். ஆடி அமாவாசை, குரு பெயர்ச்சி, ஆடிப்பெருக்கு விழா இணைந்து வந்ததால் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் கோவிலில் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் பக்தகர்கள் சிக்கி ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடும் என்பதால் வழக்கமாக ஒரு மணி நேரம் நடக்கும் ஊஞ்சல் உற்சவத்தை அரை மணி நேரத்தில் முடித்தனர். இதில் கலெக்டர் லட்சுமி, இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, மற்றும் அறங்காவலர்கள் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர். செஞ்சி டி. எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர்.