பதிவு செய்த நாள்
30
ஆக
2016
10:08
நான் பல ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ஒரு நாணயம் சுத்தம் செய்யாமல் என் தொகுப்பில் இருப்பதைக் கண்டேன். அதில்,உருவங்கள் ஏதும் தெரியாத அளவிற்கு, கறுப்பு நிறத்தில் கடினமான மாசு படிந்திருந்தது. பல நாட்கள் மெதுவாக சுத்தப்படுத்தினேன். அந்த நாணயம் குறித்த விளக்கத்தை கீழே கொடுத்துள்ளேன்.
நாணயத்தின் முன்புற மத்தியில் சிதைந்த நிலையில் ஒரு உருவம் உள்ளது. சிதைந்த உருவத்தின் மேல், தமிழ் - பிராமி எழுத்து முறையில், இரண்டு எழுத்துக்கள் தென்படுகின்றன. அந்த உருவத்தின் கீழ்பகுதியில் நீள் சதுர வடிவில் ஒரு தொட்டி இருக்கிறது. தொட்டியின் மேல் விளிம்பைத் தொட்டு இரண்டு ஆமைகள் ஒன்றை ஒன்று எதிர்நோக்கி இருப்பது போல் அச்சாகியுள்ளது.அதேபோல், தொட்டியின் கீழ் விளிம்பைத் தொட்டு இரண்டு ஆமைகள் உள்ளன. முழு உருவம் அச்சாகவில்லை. இந்த நான்கு ஆமைகளுக்கு மத்தியில் இடப்பக்கம் நோக்கி, ஒரு சிறிய ஆமை உள்ளது. தொட்டியின் வெளியே வலப்பக்கம் நாணயத்தின் விளிம்பை ஒட்டி, வேலியிட்ட மரச்சின்னம் உள்ளது. நாணயத்தின் இடது பக்கம் மேல் மூலைப்பகுதியில் மௌரிய பிராமி எழுத்து முறையில், மா என்று உள்ளது. மத்தியிலுள்ள சின்னத்திற்கு மேலாக, ற என்ற எழுத்து வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக நாணயத்தின் மேல் விளிம்பை ஒட்டி சாய்ந்த நிலையில் இருக்கிறது. இந்த எழுத்து நின்ற நிலையில் தான் இருந்திருக்க வேண்டும். இடப்பற்றாக்குறையால் சாய்ந்த நிலையால் இவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது. இந்த எழுத்து, தமிழ் - பிராமி வகையை சேர்ந்தது.
கடைசியாக, வலது பக்கம் மூலையில் மேல் விளிம்பை ஒட்டி, ன் என்ற எழுத்து உள்ளது. இதுவும் தமிழ் பிராமி வகையைச் சேர்ந்தது. இந்த நாணயத்தில் இருப்பது போல் தொட்டியும், அதில் நான்கு பெரிய ஆமைகள், ஒன்றை ஒன்று எதிர்நோக்கி இருக்கும் நாணயத்தை, மதுரையை ஆண்ட சங்க கால பாண்டியர்கள் வெளியிட்டுள்ளனர். அந்தத் தொட்டியின் மேல் பகுதியில், யானை ஒன்று வலப்பக்கம் நோக்கி நிற்பது போல் அச்சாகியுள்ளது. அந்த நாணயத்தின் பின்புறத்தில் கோட்டு வடிவ மீன் சின்னம் அழகாக உள்ளது. இந்த நாணயம் குறித்து, நான் வெளியிட்டுள்ள பாண்டியன் பெருவழுதி நாணயங்கள் என்ற நுாலில் பார்க்கலாம். அந்த நாணயத்தின் படத்தை அருகே கொடுத்துள்ளேன். இந்த நாணயம் போல் மாறன் பெயர் பொறிப்பு நாணயத்தில் சிதைந்த நிலையில் உள்ள உருவம் யானையின் உருவமாக இருக்கலாம்.
மாறன் பெயர் கொண்ட நாணயத்தின் பின்புறம்: இரண்டு பெரிய மீன்கள், ஒன்றை ஒன்று எதிர் நோக்கி நின்ற நிலையில் உள்ளன. ஆய்வின் முடிவு: நான் ஏற்கனவே செழியன் நாணயம் பற்றி எழுதியுள்ள கட்டுரையில், இரட்டை மீன்கள் சங்ககால கொற்கை பாண்டியர்களின் சின்னம் என்று குறிப்பிட்டிருக்கிறேன். மேலும், அக்கட்டுரையில் பேரரசன் அசோகன் தன் கிர்னார் கல்வெட்டில் சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, சேர, தாமிரவருணி என்ற நாடுகள், தன் நாட்டின், தென் எல்லைக்கு அப்பால் இருந்ததாகக் கூறிஉள்ளதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். இக்கல்வெட்டின் காலம், கி.மு., மூன்றாம் நுாற்றாண்டாக இருக்கலாம். கொற்கையை தலைநகராகக் கொண்ட பாண்டியர்களின் நாடு தாமிரவருணி நாடாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளேன். இந்த நாணயத்தின் காலம் கி.மு., மூன்றாம் நுாற்றாண்டாக இருக்கலாம். இதுபோன்ற சங்க கால நாணயச் சான்றுகள், வருங்காலத்தில் கிடைத்தால், தமிழகத்தின் தொன்மை வரலாறு பற்றி, மேலும் அறிவதுடன், அக்காலத்தை நிர்ணயம் செய்யவும் உதவிடும் என்று நம்புகிறேன்.
இரா. கிருஷ்ணமூர்த்தி,தலைவர், தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகம், சென்னை.