பதிவு செய்த நாள்
02
செப்
2016
12:09
விழுப்புரம்: பாதுார் பிரத்தியங்கராதேவி கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, நிகும்பலா யாகம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, பாதுார் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி கோவிலில், ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, நிகும்பலா யாகம் நேற்று நடந்தது. காலை 10:30 மணிக்கு, சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, யாக குண்டத்தில் பழ வகைகள், நெய் சேர்ப்பிக்கப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் மேற்பார்வையில், மோகன குருக்கள் தலைமையில், வேத மந்திரங்கள் முழங்க, யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் சேர்க்கப்பட்டது. தங்களது வேண்டுதல் எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் பக்தர்கள் சேர்ப்பித்தனர். புடவைகளும், தாலி, வளையல்களும் சேர்ப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.