அறிவிப்பாளர்: கப்பாப் பின் அல்அரத் (ரலி)அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை காபாவின் நிழலில் தமது போர்வையை தலைக்குக் கீழே வைத்துப் படுத்துக் கொண்டிருந்தார்கள். (அந்தக் காலகட்டத்தில் மக்கா வாசிகள் முஸ்லிம்கள் மீது எல்லையற்ற கொடுமைகளை இழைத்துக் கொண்டிருந்தனர்) நாங்கள் அண்ணலாரிடம் வினவினோம்: “நபியவர்களே! தாங்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் உதவி கேட்க மாட்டீர்களா? இந்த அநீதி ஒழிந்திட இறைஞ்ச மாட்டீர்களா? (எதுவரை இந்தக் கொடுமைகள் தொடரும்? எப்போது இந்தத் துன்பப்படலம் நீங்கும்?)” அண்ணலார் இதனைக் கேட்டு விட்டுக் கூறினார்கள்: “உங்களுக்கு முன்னர் எப்படிப்பட்டவர்களெல்லாம் (இஸ்லாமியப் போராட்ட வரலாற்றில்) சென்றிருக்கிறார்கள் என்றால், அவர்களில் சிலருக்குக் குழி தோண்டப்பட்டு, அதில் அவர்கள் நிற்க வைக்கப்படுவார்கள். பிறகு ரம்பம் கொண்டு வரப்பட்டு அவர்களது உடல் இருகூறுகளாகப் பிளக்கப்படும். இவ்வாறு கொடுமைப்படுத்தப்பட்ட பின்னரும் அவர்கள், தம் தீனை விட்டு மாறிடவில்லை.
அவர்களின் உடலில் இரும்புச் சீப்புகளால் குத்தப்படும்! அவை சதையைக் கடந்து எலும்புகளையும் நரம்புகளையும் சென்று தாக்கும். ஆனாலும் அந்த இறை நம்பிக்கையாளர்கள் சத்தியத்தை விட்டுப் பிறழ மாட்டார்கள். இறைவன் மீது ஆணையாக, இந்த மார்க்கம் ஓங்கியே தீரும். எந்த அளவுக்கெனில், ஒருவன் (யமன் நாட்டின் நகரான) ஸன்ஆ விலிருந்து ஹலரமவ்த் வரை பயணம் செய்வான் பாதையில் அல்லாஹ்வைத் தவிர, வேறெவருடைய அச்சமும் இருக்காது. ஆடு மேய்ப்பவனுக்கு தன் ஆடுகளை ஓநாய் கவ்விச் சென்று விடுமே என்ற ஓநாய் பற்றிய அச்சம் மட்டுமே இருக்கும். ஆனால், அந்தோ! நீங்கள்தான் (அந்தக் காலம் வருவதற்கு முன்) பொறுமையிழந்து அவசரப்படுகின்றீர்கள்.” (புகாரி)விளக்கம்: யமன் நாட்டிலிருந்து பஹ்ரைன், ஹலரமவ்த் வரையுள்ள பரந்த நிலப்பரப்பில் சத்தியத்தின் பகைவர்களுடைய வலிமை அழிந்து விடும். மக்கள் இறைவனுக்கு அடிபணிந்து வாழும் பாதையில் சுதந்திரமாக நடை போடுவார்கள். கப்பாப்(ரலி) அவர்கள், 13 ஆண்டுகால மக்கா வாழ்க்கையின் வரலாற்றை (மிகவும் சுருக்கமான சொற்களில்) இந்த நபிமொழியில் முழுமையாக சமர்ப்பித்து விட்டார்கள். அவர்களுக்கு அண்ணலார் தெளிவான சொற்களில் “பொறுமையை மேற்கொள்ளுங்கள்; அரசியல் அதிகாரம் இஸ்லாத்திற்குக் கிடைக்கும் வேளை வரப்போகின்றது. அப்போது இறைவனை வணங்கி, அவனுக்கே அடி பணிவோர் எல்லாவித அச்சங்கள், ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாப்பு பெற்றவர்களாக இருப்பார்கள்” என்று உணர்த்தினார்கள். – அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நுõலில் இருந்து...