பதிவு செய்த நாள்
09
செப்
2016
11:09
ஆசி கேட்டு, தன்னை தொடும் பக்தர்களை, திரும்பி தொட்டு பார்த்து நலமுடன் அனுப்புவதும், வராத பக்தர்களை நினைத்து, தெரு முனையில் நின்று எட்டி பார்த்து ஏங்குவதும் தான் தாடிக்காரசாமி.அதையே, தொட்டவனை தொட்டவுடன் தொட்டு பார்க்கும், எட்டி நின்றவனை எட்டி நின்று எண்ணி பார்க்கும் என்ற போதனையாக உச்சரித்து, அவரது ஜீவ சமாதியை வணங்குகின்றனர் பக்தர்கள். ஒன்றரை நுாற்றாண்டுக்கு முன், சிவகாசியில் பிறந்த அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் காசி விஸ்வநாதன். திருமணமாகி, குழந்தைகளுடன் வாழ்ந்த காசி விஸ்வநாதன், தனது ஆன்மிக சக்தியாலும், மரபு வழி ஆரோக்கியம் கற்றதாலும் இயற்கை மூலிகையை வழங்கி பலரை குணப்படுத்தி உள்ளார். தனது, 32வது வயதில், துறவு பூண்டு, பல திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொண்டார்.
ஜீவசமாதி அடைந்தவர்:பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின், தனது, 50வது வயதில் கிண்டி வந்ததாக, வாய்மொழி தகவல்களை வைத்து, வரலாறு சொல்கின்றனர், பக்தர்கள். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எந்தப் பிரச்னை இருந்தாலும், இவரைத் தொட்டு வணங்கினால், அடுத்த நிமிடமே, அந்த நோயும், பிரச்னையும் நீங்கியதாக பக்தர்கள் நம்பியுள்ளனர். அந்த நம்பிக்கை, சந்ததிகளைக் கடந்து, இன்றைக்கு அவரது ஜீவ சமாதியை தொட்டு வணங்க வைக்கிறது. நோயாளிகளைத் தொட்டு குணமாக்கியதோடு, மூலிகைகளைக் கொடுத்தும் குணப்படுத்தி உள்ளார், தாடிக்கார சாமி. தனது இறுதிக்கணத்தை ஏற்கனவே கணித்திருந்த அவர், தனது, 75வது வயதில், பவுர்ணமி அன்று காலை, 9:00 மணிக்கு ஜீவ சமாதி அடைந்தார்.
இந்த சமாதியை மக்கள் வழிபடும் கோவிலாக மாற்றி, சமாதி மேல் சிவலிங்கம் வைத்து சைவ வழிபாடு செய்கின்றனர்.இங்கு, கஞ்சா பிடித்து, தியானம் செய்ய அனுமதி கிடையாது. பக்தர்கள் கூட்டம், அதிகமாக வருவதன் காரணமாக, 2001 முதல், இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோவில் வந்துள்ளது. கடந்த, 2002ல் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்த, கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, தமிழக அரசு அறிவித்த ஒருகால பூஜை திட்டத்தில் செயல்பட்டு வருகிறது.
சித்ரா பவுர்ணமியன்று... தினமும், காலை, 7:30 மணி முதல் 9:00 மணி வரை அபிஷேகம் நடக்கும் பிரதோஷம், கார்த்திகை மற்றும் ஜீவசமாதி அடைந்த சித்ரா பவுர்ணமி நாட்களில், சிறப்பு வழிபாடு நடைபெறும். 24 மணி நேரமும் கோவில் திறந்திருப்பதால், மனஅமைதிக்காக தியானம் செய்ய நிறைய பக்தர்கள் வருகின்றனர்.பூ, பழம், நெய் அபிஷேகம் நடைபெறும். பக்தர்களுக்கு, விபூதி, கற்கண்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இடம்: தாடிக்கார சாமி கோவில், தாடிக்காரர்சாமி தெரு, ஆலந்துார். (கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில்)நடைதிறப்பு: தினமும் காலை: 7:30 மணி முதல் 9:00 மணி வரை அபிஷேகம் தியானம் செய்ய வசதியாக, 24 மணி நேரமும் கோவில் திறந்திருக்கும்.
கோவில் நிர்வாகி: சீனிவாசன் - 97899 86473 - நமது நிருபர் -