உலக மக்களை தேவன் ஏன் கஷ்டப்பட வைக்கிறார்?’ என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது.“ஆண்டவரே! செய்யாத தவறுகளுக்காக என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறீர்? என் குடும்பத்தை ஏன் வறுமையில் ஆழ்த்துகிறீர்? என் மகன் படிக்காமல் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துகிறானே! எனக்கு அலுவலகத்தில் ஏன் இத்தனை சோதனை? என் மகள் காதல்வயப்பட்டு ஒருவனுடன் சுற்றுவதாக பார்த்தவர்கள் சொல்கிறார்களே! கர்த்தாவே! நான் செய்த பாவங்கள் தான் என்ன?” இப்படி ஏதோ ஒரு கஷ்டத்தைச் சொல்லி தேவனிடம் மக்கள் புலம்புகிறார்கள்.“தமிழகத்தில் ஏன் இவ்வளவு சாலை விபத்துக்களை அனுமதிக்கிறீர்கள்?” என்று போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரியைக் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? “என்னை ஏன் குற்றப்படுத்தி கேள்வி கேட்கிறீர்கள்! ஒவ்வொருவரும் துணிந்து சாலை விதிகளை மீறுகிறார்கள். அப்படி மீறுவோர் தான் விபத்தில் சிக்குகிறார்கள்.
வேதனையை அவர்களே வரவழைத்துக் கொள்கிறார்கள்,” என்பார். இது நிஜம் தானே! சட்டத்தை மீறுவதால் தானே துன்பம் வருகிறது! இதே போல், ஆண்டவருடைய சட்டப் புத்தகமான வேதாகமத்தை (பைபிள்) புறக்கணிப்பதால் தான் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். தேவன் நமக்கென சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறார். பொய் சொல்லாதே, திருடாதே, உழைத்து வாழ வேண்டும்... இப்படியெல்லாம் சொல்லிஇருக்கிறார். ஆனால் அதை பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லையே! பைபிளில் ஒரு வசனம், “உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் அதிலே சுகமேயில்லை. அது காயமும், வீக்கமும், நொதிக்கிற ரணமுமுள்ளது. அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயால் ஆற்றப்படாமலும் உள்ளது” என்கிறது. மனித சரீரத்தின் உண்மைத்தன்மை இந்த வசனத்தில் வெளிப்படுகிறது. மனித உடல் ஒரு சதைப்பிண்டம். இதை வைத்துக் கொண்டு என்ன ஆட்டம் போடுகிறார்கள் என்பது மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாவத்தின் பலன்களே துன்பமாக வருகின்றன. ஆண்டவரிடம் பாவமன்னிப்பு கேட்டு அதில் இருந்து விடுபடுங்கள் என்பது இந்த வசனம் உணர்த்தும் கருத்து. இனியேனும் தேவனின் கட்டளைகளை மீறக்கூடாது என உறுதிஎடுக்க வேண்டும்.