திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக் கிழமையை முன்னிட்டு தேகளீச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசிமாத மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 4:30 மணிக்கு மூலஸ்தானத்தில் திருவிக்ரமன் விஸ்வரூபதரிசனம், 5:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, 7:30 மணிக்கு நித்யதிருவாராதனை நடந்தது.
காலை 9:00 மணிக்கு மணிக்கு ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் கண்ணாடிஅறை மண்டபத்தில் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம், 12:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த இவ்விழாவில், தொழில் அதிபர்கள் கார்த்திகேயன்‚ சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.