பதிவு செய்த நாள்
07
அக்
2016
11:10
சேலம்: சேலத்தில், 1,008 சிவன் கோவிலை கையகப்படுத்திய, இந்துசமய அறநிலையத்துறை, அதை, அறிவிப்பு பலகை வைத்து, தெரியப்படுத்தி உள்ளது. சேலம், அரியானூரில் பிரசித்தி பெற்ற, 1,008 சிவன் கோவில், ஆக்கிரமித்து கட்டப்பட்டதால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அக்கோவிலை, இந்துசமய அறநிலையத்துறை, செப்.,21ல் கையகப்படுத்தியது. அதற்கான நடவடிக்கையை, சேலம், டி.ஆர்.ஓ., சுகுமார் மேற்கொண்டார். கோவிலை கட்டி நிர்வகித்து வந்த, நிரந்தர அறங்காவலர்களான, அப்பகுதியில் உள்ள தனியார் பல்கலை வேந்தர் கணேசன், இணை வேந்தர் சரவணன் ஆகியோரை, அதே நாளில், சஸ்பெண்ட் செய்து, சேலம் அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி, உத்தரவிட்டார். தொடர்ந்து, கோவில் தக்காராக சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டு, 24ம் தேதி, பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், அறநிலையத்துறை சார்பில், அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி கூறியதாவது: கோவிலை கையகப்படுத்தியதற்கு, உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. மாறாக, செயல் அலுவலருடன் இணைந்து, இரு மாதங்களில், கோவில் நிர்வாகத்தை கவனிக்க உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, செயல் அலுவலர் வழிகாட்டுதலின்பேரில் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுடைய செயல்பாட்டை பொறுத்து, கோவில் நடவடிக்கையில், அவர்களது பங்களிப்பு இருக்கும். எனவே, கோவில் இடம், வருவாய் துறைக்கு சொந்தமானது. அதனால், 1,008 சிவன் கோவில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் மற்றும் வருவாய் துறையினர், அங்கு, கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.