பதிவு செய்த நாள்
12
அக்
2016
01:10
சென்னிமலை: நவராத்திரி விழாவின், 10ம் நாளான விஜயதசமி விழாவில் முருகப்பெருமான், வன்னாசுரன் என்ற அசுரனை அம்பு செலுத்தி அழிக்கும் விழா (அம்பு சேவை) சென்னிமலையில் நடந்தது.
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் வரும், கைலாசநாதர் ஆலயத்தில், கடந்த ஒன்பது நாட்களாக நவராத்திரி விழா நடந்தது. தினமும் ஒரு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பத்தாவது நாளான நேற்று மாலை, 4:50 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாச நாதர் கோவிலில் இருந்து முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் வில், அம்பு, ஈட்டி, வாள், போன்ற ஆயுதங்களுடன் புறப்பட்டார். வள்ளி, தெய்வானை தனியாக சப்பரத்தில் எழுந்தருளி, கிழக்கு ராஜா வீதி, தெற்கு ராஜா வீதி, மேற்கு ராஜாவீதி வழியாக பிராட்டியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு வாழை மரத்தில் வன்னி தழை வைத்து அலங்கரித்து, அசுரன் வன்னாசுரன் உருவாக்கப்பட்டிருந்தான். தலைமை குருக்கள் ராமநாதசிவம் சிறப்பு பூஜைகள் நடத்தி, முருகப்பெருமான் கொண்டு சென்ற வில் அம்பு எடுத்து, வன்னாசுரன் மீது பாய்ச்சும் வைபோகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நேரில் கண்டு களித்தனர்.