திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு மூலவர் கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு விசேஷத் திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு மேளதாளங்கள் முழங்க கருட வாகனத்தில் கல்யாண ஜெகநாத பெருமாள் திருப்புல்லாணி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார். காலை 10:00 மணிக்கு மீண்டும் திருப்புல்லாணி கோயிலை வந்தடைந்தார். புராணத்தில் குசேலன், கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்து செல்வம் பெற்ற தினமாக கொண்டாடப்படுகிறது.
அட்சயா என்றால் அது குறைவில்லாதது அல்லது அழிவற்றது என்று பொருள்படும். இந்நாளில் செய்யப்படும் எந்த ஒரு செயலும் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை நாளில் செல்வம் பெருக மகாலட்சுமி மற்றும் விஷ்ணு, விநாயகரை வைத்து வழிபாடு செய்கின்றனர். அரிசி பருப்பு, வெல்லம் போன்ற மங்களப் பொருட்களை வீடுகளில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தனர். நகைக் கடைகளில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள் அட்சய திருதியை முன்னிட்டு வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.