பதிவு செய்த நாள்
27
அக்
2016
11:10
கன்னிவாடி, கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில் குருபூஜை, நவ. 4ல் நடக்க உள்ளது. கன்னிவாடி அருகே கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் ஐப்பசி மூல நட்சத்திரத்தில், குருபூஜை விழா நடக்கும். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் சாதுக்கள் பங்கேற்பர். இந்தாண்டு விழா, நவ. 5ல் துவங்குகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் மாலையணிந்து விரதம் மேற்கொண்டுள்ளனர். சிவனுாரணி, பாண்டியன்கிணறு, திருமலைக்கேணி, திருமூர்த்தி மலை, சுருளி, காசி, ராமேஸ்வரம், கொடுமுடி, சதுரகிரி உள்ளிட்ட இடங்களில் இருந்து, பக்தர்கள் புனிதநீர் எடுத்து வர உள்ளனர். இவை, நவ. 3ல், பாதயாத்திரையாக கசவனம்பட்டி அழைத்து வரப்படும். நவ. 4ல், விநாயகர் வேள்வியுடன் துவங்கும் விழாவில், திருவாசக, திருமுறை பாராயணத்துடன், 108 படி பாலாபிஷேகத்துடன் குருபூஜை நடக்கிறது. பின்னர், உற்சவ மூர்த்திக்கு, தங்கக் கிரீடம் சாற்றுதலுடன் விசேஷ பூஜை நடக்கும். அன்னதானக் கொடி ஏற்றப்பட்டு, மகேஸ்வர பூஜை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, ஆன்மிகச் சொற்பொழிவு, பஜனை மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.