பதிவு செய்த நாள்
25
நவ
2016
12:11
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லுார் பசுபதீஸ்வரர் கோவிலில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என, எங்கள் ஊர் எங்கள் பெருமை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் ஒன்றியம், பந்தநல்லுாரில், பாடல்பெற்ற தலமான, பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. அந்த கோவில் அகழி, மதில் சுவர், கல்வெட்டுகள் அழிக்கப்படுவதாகவும், பல முறைகேடுகள் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, எங்கள் ஊர் எங்கள் பெருமை அமைப்பின் நிர்வாகி, வெங்கட்ராமன் கூறியதாவது:மணியாற்றங்கரையில் உள்ள, பந்தநல்லுார், பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, பல ஏக்கர் நிலத்தை, கோவிலுக்கு தொடர்பில்லாத நபர்கள், அபகரித்துள்ளனர். கோவிலில் இருந்த சோழர் கால கல்வெட்டுக்கள், தேர் உள்ளிட்ட பொருட்கள், கோவிலை சுற்றியுள்ள, நீர் நிலையான அகழியையும் அழித்துள்ளனர்.அருகில் உள்ள, கிராம கோவில் சிலைகளை பாதுகாப்பதாக கூறி, புதிய சிலைகளை நிறுவி, பழமையான ஐம்பொன் சிலைகளை, கள்ள சந்தையில் விற்கின்றனர். அங்குள்ள சுரங்கப் பாதையை, முறைகேடாக பயன்படுத்துகின்றனர். இதற்கு, அறநிலையத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். கோவில் சொத்துகளை, தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.