பதிவு செய்த நாள்
25
நவ
2016
12:11
பெங்களூரு: கோவிலில் கடவுளை தரிசிக்க, அனைத்து மதத்தினரும், சமூகத்தினரும் அனுமதிக்கப்படுவர் என்ற அறிவிப்பு பலகையை கோவில் முன் வைக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவிலுள்ள பல கோவில்களில், ஜாதி அடிப்படையில் சில சமூகத்தினர் அனுமதிக்கப்படுவதில்லை என, இந்து அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்தன. குறிப்பாக, கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகளில் உள்ள கோவில்களில், பிற சமூகத்தினர் அனுமதிக்கப்படுவதில்லை. சில கோவில்களில் உயர் வகுப்பினரை தனியாகவும், பிற இனத்தவரை தனியாக அமரவைத்து உணவு வழங்குகின்றனர் என்றும் புகார் வந்தது. இதை எதிர்த்து கடந்த வாரம், உடுப்பியை நோக்கி, சில சீர் திருத்த அமைப்புகள் பேரணி நடத்தின. இந்த வேற்றுமையை களைய, மாநிலத்தில் உள்ள, 34 ஆயிரத்து 453 கோவில்களிலும், ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும். அனைத்து அறநிலைய கண்காணிப்பில் உள்ள கோவில்கள் மட்டுமின்றி, தனியார் கோவில்களிலும் கடவுளின் ஆசியை பெற அனைத்து மதத்தினர், சமூகத்தினருக்கும் உரிமை வழங்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது. கடவுளின் பார்வையில் அனைவரும் சமம். மதம், ஜாதி, இனம், பாலினம், பிறந்த இடம் அடிப்படையில் ஒருவரையும் இழிவுபடுத்தக் கூடாது என, சட்டமே உள்ளது. இந்த நிலையில், குறிப்பிட்ட சமூகத்தினரை கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பது குற்றமாகும். அனைத்து மதத்தினரும் எவ்வித தடையும் பயமும் இன்றி கோவிலுக்குள் செல்லலாம் என்ற அறிவிப்பை, கோவில் வாசலில் வைக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. வரும், 2018ம் ஆண்டு தேர்தலில் அனைத்து தரப்பினர் ஓட்டுகளை பெற, சித்தராமையா அரசு இந்த அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.