பதிவு செய்த நாள்
26
நவ
2016
12:11
வாழப்பாடி: சிறுமலை கிராமத்தில் புதிய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சேலம் வரலாற்று தேடல் குழுவை சேர்ந்த, விழுப்புரம் வீரராகவன், பொன்.வெங்கடேசன், டாக்டர் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர், வாழப்பாடி அருகே, அருநூத்து மலையில் உள்ள, சிறுமலையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள விநாயகர் கோவில் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகள் இருப்பதை, தொல்லியல் துறையினர் உறுதி செய்தனர். இதுகுறித்து, கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன் கூறியதாவது: சிறுமலையில் கிடைத்துள்ள கருவிகள், வெவ்வேறு வடிவில் அமைந்த கை கோடாரிகள். அவை, ஒருபுறம் கூராகவும், மற்றொரு புறம் தட்டையாகவும் உள்ளது. கூரான முனை குத்திக்கிழிக்கவும், தட்டையான பகுதி வெட்டவும் பயன்படுகிறது. மேலும், எளிமையாக பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றபடி, கைக்கு அடக்கமாய் உள்ளது. இந்த கிராமத்தில், 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கல்வெட்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, ஆய்வு செய்தால் பல புதிய தகவல் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.