பதிவு செய்த நாள்
26
நவ
2016
12:11
மதுரை, மதுரை சின்மயா மிஷன் சார்பில் சொக்கிகுளம் ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தில் பகவத்கீதை ஞான வேள்வி நடக்கிறது. சுவாமி சிவயோகானந்த மகராஜ் பேசியதாவது: ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இரு இயல்புகள் இருக்கின்றன. ஒன்று சாமான்ய மனித இயல்பு, மற்றொன்று உயர்ந்த தெய்வீக இயல்பு. பெரும்பாலும் மனித இயல்புகளான காமம், கோபம், பயம், பலவீனம், பொறாமை, ஒப்பீடு, பாவம், புண்ணியம் போன்ற சிந்தனைகளே மேலோங்கி நிற்கின்றன. இதுவே துன்பத்திற்கும், பந்தத்திற்கும் காரணமாக உள்ளது. இதற்கு அப்பாற்பட்டு நம் எல்லோரிடத்திலும் ஓர் உயர்ந்த தெய்வீக இயல்பு புதைந்துள்ளது. அதை உணர்ந்து அந்நிலைக்கு நம்மை நாமே உயர்த்தி கொள்வதற்கான பாதையை கீதை உபதேசிக்கிறது. தெய்வீக இயல்பு உலகனைத்தையும் வியாபித்து இயங்குகின்றது. ஆனால் எல்லோராலும் முழுமையாக அறியப்படாமல் உள்ளது. மனித இயல்பில் ஒருவன் மேலோட்டமாக இவ்வுலகை காண்கிறான். தெய்வீக இயல்பில், உலகை இறைத்தன்மையோடு இணைந்து காணும் கண்ணோட்டம் பெறுகிறார். தன்னுடைய குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து உலகம் முழுவதையும் ஓர் குடும்பமாக கருதும் மனநிலைக்கு உயர்கிறார். உலகில் தோன்றும் அனைத்தும் பரம்பொருளின் வெளிப்பாடு என உணர்கிறார். இதனால் அளவற்ற உள்ளத் துாய்மையும் மன உறுதி ஏற்படுகிறது. இதுவே ஞானம். இதை அறிந்தவர் ஞானி, என்றார். மாலை 6:45 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சி இன்று நிறைவடைகிறது.