பதிவு செய்த நாள்
28
நவ
2016
12:11
ராமேஸ்வரம்: ராமாயண வரலாற்றில் தொடர்புடைய வாலிக்கு, கச்சத்தீவில் கோயில் அமைத்து விழா நடத்த அனுமதிக்க வேண்டும், என இந்து முன்னணியினர் தெரிவித்தனர். தமிழக முதல்வருக்கு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி அனுப்பிய மனுவில் கூறியிருப்பது: கடந்த 1605ம் ஆண்டில் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் 69 கடற்கரை கிராமம், 7 தீவுகளை தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர். 1622--1635ம் ஆண்டில் ஆட்சி செய்த கூத்தன் சேதுபதி வெளியிட்ட செப்பு தகட்டில் இதற்கான ஆதாரங்கள் உள்ளது. சேதுபதி மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவில் பசுமாடுகள், மலர்கள் வளர்க்கப்பட்டு அங்கிருந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு பூக்கள், பூஜை பொருள்கள் மற்றும் அபிஷேகத்திற்கு பால் வந்துள்ளது. மேலும், ராமாயண வரலாற்றில் ஸ்ரீ ராமரும், சுக்ரீவன் சகோதரர் வாலியும் போரிட்ட இடம் கச்சத்தீவு ஆகும். அக்கால கட்டத்தில் கச்சதீவை வாலி தீவு என்றழைத்தனர்.
* வாலிக்கு கோயில்: பிரசித்த பெற்ற இத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது, 29.7.1974ல் பாராளுமன்றத்தில் பேசிய அப்போதைய எம்.பி., வாஜ்பாய் வாலி தீவு என்றும், இதனை தாரை வார்க்க கூடாது, என பேசினார். ராமாயண காலத்தில் கச்சத்தீவில் வாலிக்கு கோயில் அமைத்து, வணங்கினர். பின், இயற்கை சீற்றத்தில் இக்கோயில் அழிந்து விட்டது. எனவே கச்சதீவில் வாலிக்கு கோயில் கட்டவும், ஆண்டுக்கு ஒருமுறை விழா நடத்த வேண்டும். இதில் தமிழக பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.