சாயல்குடி, சாயல்குடி அருகே எம்.கரிசல்குளத்தில் பழமைவாய்ந்த வில்வநாதர் கோயில் உள்ளது. இங்கு திருப்பணிகள் செய்துமுடித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் முடிவு செய்துள்ளனர். திருப்பணிகளுக்கான பூமி பூஜை, பாலாலயம் கடந்த மே., 9ல் நடந்தது. தொடர்ந்து 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருங்கல் மூலம் கலைநயத்துடன் திருப்பணி வேலைகள் துவங்கி தொடர்ந்து நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றிற்கு நிலைக் கால் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. கன்னிமூல கணபதி, நவக்கிரகங்கள், பரிவார தெய்வங்கள் சன்னதி, ராஜகோபுரம் ஆகியவற்றுக்கான நிலைக்கால் நாட்டு பூஜை வேத மந்திரங்கள் முழங்க நடந்தது. குலதெய்வ குடிமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.