பதிவு செய்த நாள்
02
டிச
2016
04:12
நமது பாரத தேசத்துக்கு பெருமைதரக்கூடியது மகான்களின் அவதாரமே. அவர்கள் தெய்வாம்சமாக அவதரித்தவர்கள். நாம் தெய்வத்தை தரிசிக்கும் ஆவலோடு பல கோயில்களுக்கும் சென்று வணங்குகிறோம். இருந்தும், தெய்வத்தை உணரும் பேறு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. நாம் இறைவனிடம் நம்முடைய குறைகளைச் சொல்கிறோம். ஆனால் தெய்வத்தின் பதிலைக் கேட்க முடிவதில்லை. ஆனால் மகான்களோ இறைவனோடு பேசி, அவனுடைய அனுபூதிகளை உணர்ந்து பேரானந்தத்தை அனுபவித்து, நமக்கும் அருளையும் ஆனந்தத்தையும் அள்ளி வழங்குகிறார்கள். இந்த வகையில் ஸ்ரீஆதி சங்கர பகவத்பாதரும் பட்டினத்தடிகளும் உபதேசித்தருளிய பாடல்களைப் படிக்கும்போது மனதில் இனம்புரியாத சாந்தியும் ஞான ஒளியும் பிறக்கிறது.
கேரள மாநிலத்தில் சிவகுரு - ஆரியாம்பா தம்பதிக்கு மகனாகப் பிறந்த ஆதிசங்கரர் சிறு வயதிலேயே துறவு பூண்டு, பரம கருணையோடு எண்ணற்ற பாடல்களைப் பாடி மக்கள் மனதிலுள்ள மாசுகளை அகற்றினார். உலகின் நிலையாமையையும் இறைவனை உள்ளத்தில் உணர வேண்டும். என்றும் பாடிய பாடல்களே பஜகோவிந்தம் இந்தப் பாடல்கள் மோஹ முத்கரம் என்னும் பெருமைகொண்டது. இதை சாமவேத சாரம் என்றும் கூறுவர்.
இதைப்போன்றே பட்டினத்தடிகளும் மக்களுக்கு உறுதிப்பொருள்களை உணர்த்த பல பாடல்களைப் பாடியுள்ளார். இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசர் - ஞான கலாம்பிகை தம்பதியருக்குப் பிறந்தவர்.
திருவெண்காடர் உரிய பருவமடைந்ததும் சிவகலை என்னும் மங்கை நல்லாளை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். வணிகத்தில் ஈடுபட்டு பொருளீட்டினார். இந்நிலையில் சிவசர்மன் - கசீலை தம்பதியர் ஒரு குழந்தையைக் கொண்டுவந்து கொடுக்க, அவர்களுக்கு மிகுந்த திரவியத்தை வழங்கி அதைப் பெற்றுக்கொண்ட திருவெண்காடர் குழந்தைக்கு மருதவாணன் என்று பெயர் சூட்டி வளர்த்துவந்தார்.
மருதவாணன் இளைஞனானதும் தந்தையின் விருப்பத்திற்கிணங்க கடல் கடந்து வணிகம் செய்யச் சென்றான். செல்வத்துடன் மகன் வருவான் என்று திருவெண்காடர் எதிர்பார்த்திருக்கு, திரும்பிவந்த மகன் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்துவிட்டு மறைந்துவிட்டான். பெட்டியைத் திறந்து பார்த்ததும் அதில் காதற்ற ஊசி ஒன்றிருந்தது. அதனுடன் இருந்த ஓலையில் காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்ற உன்னதமான- உண்மையான ஞானத் திறவு கோல் இருந்தது. இந்த நிகழ்ச்சியானது திருவெண்காடரின் வாழ்க்கையில் திருப்பமாக அமைந்துவிட்டது. அவருடைய மனம் உலகப்பொருட்களின் நிலையாமையை உணர்ந்தது. கடவுளிடம் மட்டுமே கருத்தை செலுத்த வேண்டும் என்று கதறியது. ஸ்ரீபரமேஸ்வரனும் இவறை ஆட்கொண்டு அருளை பொழிய ஆயத்தமானான். திருவெண்காடர் அந்த விநாடியே வீடு, வாசல், உற்றார் - உறவினர் எல்லாவற்றையும் துறந்தார். பட்டினத்தார், பட்டினத்தடிகள் என்று அழைக்கப்பட்டார். தன்னுடைய தாயின் அந்திமக்காலம் வரை அந்த ஊரிலேயே இருந்து இறுதிச் சடங்குகளை செய்தார்.
பட்டினத்தடிகள் சிவனை சிந்தையுள்ளே நினைந்துருகி எண்ணற்ற பல பாடல்களைப் பாடினார். பட்டினத்தார் பாடல்களும், பகவத்பாதரின் பஜகோவிந்தமும் கருத்தொற்றுமை கொண்டவை. பகவத்பாதர்,
பஜ கோவிந்தம், பஜகோவிந்தம்
கோவிந்த பஜ மூட மதே
(கோவிந்தனை நினைமனமே என்று தொடங்குகிறார். பட்டினத்தாரும்,
நினைமின் மனமே, நினை மின் மனமே
நினைமின் மனமே, சிவபெருமானே,
செம்பொன்னம்பலவாணனை
என்று இறைவனைத் தொழவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்.
மேலும் ஆதிசங்கர பகவத்பாதர்,
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ரிக் கரணே
தோன்றி மறையும் தன்மையுடைய இவ்வுலகில் எல்லா அறிவுகளையும்விட இறைவனின் நாம ஸ்மரணையே சாலத்சிறந்தது. அந்திமக் காலத்தில் உயிர்பிரியும் தறுவாயில் யாருமே நமக்குக் துணையாக வரமாட்டார் என்கிறார்.
பட்டினத்தாரும்,
செருக்கடையாதே, உன்னை சேர்ந்துள்ள
சுற்றத்தாரின்
பெருக்க பணமும் தேகபலம் எனும் போகம்
எல்லாம்
பொருக்கன மறையும் வாழ்வு பொய்ம்மானின்
வெட்டை போலும்
சுருக்கென மடநெஞ்சே நீ மெய்ஞ்ஞான மார்க்கம் குழல்வாய்
என்கிறார். அடுத்து ஒரு பாடலில் பகவத்பாதர் சொல்வார்.
மாகுரு தநஜந யௌவன கர்வம்
ஹாதி நிமேஷாத் கால ஸர்வம்
மாயாமயமித மகிலம் பத்வா
பிரும்மபதம் த்வம் ப்ரவிச விதித்வா.
இதே கருத்தை பட்டினத்தார் தெளிவாகவே,
ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றும் பெற்ற
பேரும் சதமல்ல பெண்டீர் சதமல்ல
பிள்ளைகளும் சதமல்ல சீரும்
சதமல்ல செல்வமும் சதமல்ல
தேசத்திலே யாரும் சதமல்ல
நின்றாள் சதம் கச்சி ஏகம்பனே.
என்கிறார். என்ன ஒரு அருமையான கருத்துள்ள பாடல்.
அடுத்து ஒரு பாடலில் பட்டினத்தார்,
காடே திரிந்தென்ன காற்றே
புசித்தென்ன கங்கை சுற்றி
ஓடே எடுத்தென்ன உள்ளன்பு
இல்லாதவ ரோங்கி விண்ணோர்
நாடேயிடை மருதூர் ஈசர்க்கு
மெய்யன்பர் நாரியர் பால்
விடேயிருப்பனும் மெய்யஞ்ஞான
வீடன் பரமேவுவரே.
என உருகுகிறார்.
உயர்ந்த தேவர்கள் உலகமெனப் போற்றும் திருவிடைமருதூரில் வீற்றிருந்து அருளும் சிவபெருமானிடத்தில் உண்மையான அன்புடையவர்கள் பெண்களுடன் வீட்டில் இருந்தாலும், உண்மை ஞானத்தால் உண்டாகும் முக்தி இன்பத்தையே அடைவார்கள் என்பது கருத்து.
பகவத் பாதரும் இதே கருத்தை,
ஜடிலோ முன்டி லுஞ்சித கேசா
காஷாயாம்பர பஹுக்ருத வேஷா
பச்யந்நபி ச நபச்யந்நபி பச்யதி மூடா
ஹ்யதர நிமித்தம் பஹுக்ருத வேஷா
என்று பஜகோவிந்தத்தில் குறிக்கிறார்.
பட்டினத்தார் மனதை அழைத்து ஒரு அருமையான பாடலைப் பாடுகிறார்.
ஒழியா பிறவி எடுத்து ஏங்கி ஏங்கி உழன்ற நெஞ்சே
அழியா பதவிக்கு ஔடதம் கேட்டிய நாதியனை
மழுமான் கரத்தனை மால் விடையானை
மனதில் எண்ணி
விழியால் புனல் சிந்தி விம்மி அழு நன்மை வேண்டுமென்றே.
இதே கருத்தை பகவத் பாதரும் அழகாகச் சொல்வர்.
புநரபி ஜனனம் புநாபி மரணம்
புநரபி ஜநநீ ஜடரே சயநம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே!
மறுபடியும் பிறப்பு, மறுபடியும் இறப்பு, மறுபடியும் தாயின் வயிற்றில் படுத்தல்; இத்தகைய தாண்டுவதற்கு மிகவும் சிரமமானதும் கரையே இல்லாததுமான சம்சாரம் என்னும் கடலினின்றும் என்னைக் காப்பாற்று, முரனைக் கொன்ற கண்ணா அன்புகூர்ந்து என்னைக் காப்பாற்று என்கிறார்.
இதைப்போன்று பல பாடல்களில் பகவத் பாதருடைய கருத்தும், பட்டினத்தாருடைய கருத்தும் நம்மை சிந்திக்க வைத்து சிலிர்க்க வைக்கின்றன.
நாம் எந்த நூல்களைப் படிக்க வேண்டும் என்று பட்டினத்தார் பட்டியல் போட்டு செல்வதைப் பார்ப்போம். புண்ணிய நூல் அல்லாத நூல்களை படிப்பதே பாவம். அதனால் தீங்கே விளையும் என்று ஒரு பாடலில் சொல்வார்.
சொல்லால் வரும் குற்றம் சிந்தனையாற்
வருந்தோடஞ் செய்த
பொல்லாத தீவினைப் பார்வையிற் பாவங்கள்
புண்ணிய நூல்
அல்லாத கேள்விகளை கேட்டிடும் தீங்குகள்
யாவும்
மற்றெல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய்
கச்சிஏகம்பனே.
இதையே பகவதர் பரதர்,
கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமகேஸ்ரம்
நேயம் ஸஞ்ஞந ஸங்கே சித்தம்
தேயம் தீநஜநாய சவித்தம்
என்கிறார். இக்கருத்தையொட்டி நாமக்கல் கவிஞர்,
பாடுவாய் கீதையோடு பரமனின் ஆயிரம் நாமங்களைத்
தேடுவாய் இடையறாமல் ஈசனார் இருக்கையைக்
கூடுவாய் நல்லோர் மாட்டு குலையாத நிலையில் நிற்க
வாடுவோர் வலியோர்க்கீய வருமெனில் செல்வம் நன்றே
என்று சிறப்பாகப் பாடியுள்ளார்.
நாம் அறியாமையினால் கர்மங்களைச் செய்து மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறோம். இந்தப் பிறவியிலேயே மீண்டும் பிறவா நெறியைத் தேடிக்கொள்ள வேண்டும் என்று மகிச்சிறந்த பட்டிப்பினையை பட்டினத்தடிகள் கொடுத்திருக்கிறார்.
மகாஞானிகள் நமக்காகவே இந்தப் பாடல்களை எல்லாம் பாடி நம்மைக் கரையேற்றுவதற்கான வழியை வகுத்துத் தந்துள்ளார்கள். நாம் எதற்கெல்லாமோ பிறரிடம் பணிந்து, கெஞ்சி, அவருடைய தயவை வேண்டுகிறோம். நம்மையெல்லாம் ஆட்கொண்டு அருள்புரியும் அருளை வேண்டி மகான்கள் பாடல்களைப் பாடியுணர்ந்து அவன் அருளைப்பெறலாம்.
தன்னை நினைப்பவருடைய நெஞ்சில் தானே வந்தமர்ந்து, அந்நெஞ்சில் உள்ள ஆணவம், கன்மம், மாயையை ஒழித்து, எல்லாமே தன் மயமாகும்படி செய்கிறான். இறைவன் இந்நிலையை சித்தமலம் அனுபவித்து சிவமாக்கி என்ன ஆண்டுகொண்ட என்பார் மாணிக்கவாசகர். இறைவனை நினைத்து வழிபடுவதற்கு நம் முயற்சியால் சாத்தியமாகாது. ஒரு மகானுடைய சம்பந்தம் இருந்தால்தான் சுலபமாக ஞானத்தைப் பெறலாம். அவர்களுடைய பாடல்களை உணர்ந்து சிந்தித்து நமது வாழ்க்கைப் பாதையில் முன்னேறி இறைவன் அருளைப் பெறுவோம்.