பதிவு செய்த நாள்
02
டிச
2016
04:12
சிவனுக்கு உகந்த வில்வமரம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள பெரும்பாலான சிவன்கோயில்களில் ஸ்தல விருட்சமாக உள்ளது. தமிழ்நாட்டில் நாற்பதுக்கும் மேற்பட்ட பழம்பெரும் சிவன்கோயில்களில் ஸ்தல விருட்சமாகப் போற்றப்படுகிறது. குறிப்பாகத் திருவையாறு, திருவெறும்பூர், இராமேஸ்வரம், திருஇடைச்சுரம், திருவெண்காடு, திருவைகாவூர் ஆகிய இடங்களில் உள்ள சிவாலயங்களில் இருக்கும் வில்வமரங்கள் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. கும்பகோணத்திற்கு அருகே உள்ள கிராமம் திருவைகாவூர். இங்கு புகழ் பெற்ற வில்வனநாதர் கோயில் அமைந்துள்ளது. இது திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்றப் பழமையான க்ஷேத்திரம். வில்வம் என்றவுடன் எல்லோருக்கும் இக்கோயில் தான் ஞாபகத்திற்கு வரும், எப்படி? இத்தலத்தில்தான் சிவபெருமான் வேடனுக்கு முக்தியளித்தார். மேலும் இக்கோயிலில் வீற்றிருக்கும் நந்திகேஸ்வரர் எமதர்மனையே விரட்டியடித்தார்.
வேடனுக்கு முக்தி: ஒரு முறை காட்டில் வேடன் வேட்டைக்குச் சென்றபோது, புலி அவனை விரட்டிக் கொண்டு வர அதனிடம் இருந்து தப்பித்து ஓடி வந்தவன், உயரமான ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். இருள் சூழ இரவு வந்தது. அவன் எப்படியும் கீழே வந்துதானே ஆக வேண்டும் என்று புலியோ மரத்தடியில் படுத்துக் கொண்டு நகர்வதாக இல்லை. வேடனுக்கோ பசி, தாகம், உறக்கம், தூங்காமல் இருப்பதற்காக மரத்தில் உள்ள இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தான். பொழுது புலர்ந்தது. வெகு நேரமாகியது. கீழே படுத்திருந்த புலியின் மீது வேடன் பறித்துப் போட்ட இலைக்குவியல் மூடியிருந்ததால், புலி இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியவில்லை. ஒரு துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கீழே வந்து இலைகளை விலக்கிப் பார்த்த வேடனுக்கு ஆச்சர்யம். அங்கு புலிக்குப் பதிலாக சிவலிங்கம் இருந்தது.
இரவு முழுவதும் அவன் அமர்ந்திருந்தது வில்வ மரத்தில். அன்றைய இரவு சிவராத்திரி. அவனையறியாமலே இரவு முழுவதும் கண்விழித்து வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சித்ததால் அவனுக்கு மோட்சம் கிடைத்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது. இந்த கோயிலில் மேற்கொண்ட சம்பவத்தை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு சிவராத்திரியன்றும் வேடனுக்கு மோட்சமளித்த புராணக்கதை சொல்லப்படுகிறது. கோயிலின் கோபுர வாசலில் இச்சம்பவம் சிற்பமாகவும், ஓவியமாகவும் செதுக்கப்பட்டுள்ளது. ஆகையால் நாமும் தெரிந்தோ, தெரியாமலோ சிவபெருமானை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து பூஜை செய்தால் பிறவாவரம் கிடைக்கும் என்பது உறுதி. மூன்று பிரிவுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது. இந்த வில்வம் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் அம்சமாகப் போற்றப்படுகிறது.
வில்வ மரம் கோயிலில் மட்டுமே வளர்க்கப்படும் மரம் அல்ல. அதை நாம் வீட்டிலும் வளர்க்கலாம். வீட்டின் முன் பகுதியில் இந்த மரத்தை வளர்ப்பது மிகவும் விசேஷம். ஏனெனில் வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும். நாம் காலையில் எழுந்தவுடன் வில்வ மரத்தை தரிசனம் செய்யும்போது நமக்கு லட்சுமி கடாக்ஷம் கிட்டும். பாற்கடலில் லக்ஷ்மி தோன்றியபோது அவளுடைய கைகளில் இருந்து வில்வம் தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது. வில்வ மரம் வளர்ப்பது என்பது அஸ்வ மேதயாகம் செய்வதன் பலனைக் கொடுக்கும் என்றும் முனிவர்கள் உரைத்துள்ளனர். வில்வமரத்தின் கிளைகளே வேதங்கள், இலைகள் யாவும் சிவரூபம், வேர்கள் கோடி ருத்திரர்கள். இத்தகைய சிறப்புகளை உடைய வில்வத்தைப் பற்றிய யஜுர்வேதம், சிவபுராணம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் கூறியுள்ளன. இந்த வில்வத்திற்கு மேலும் அணி சேர்க்கும் விதமாக ஆதிசங்கரர்,
த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக பில்வம் சிவார்ப்பணம்
என்று போற்றும் பில்வாஷ்டகம் என்ற ஸ்தோத்திரத்தை இயற்றியுள்ளார்.
ஒரு வில்வ இலையைக் கொண்டு சிவனை அர்ச்சிப்பது இலட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதற்குச் சமம். வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒரு போதும் நரகமில்லை.
வீட்டில் வில்வமரம் வளர்ப்பதினால் ஆயிரம் பேருக்கு ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.
திருஇடைச்சுரம் என்ற ஸ்தலத்தில் உள்ள வில்வமரம் எண் கூட்டிலைகளைக் கொண்டு அமைந்துள்ளது. இவ்வாறு அமைதலை மகா வில்வம் என்றும், பிரம்ம வில்வம் என்றும் போற்றுவர். திருவெண்காட்டிலுள்ள வில்வமரம் முட்களே இல்லாமல் உள்ளது. வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்யும்போது சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும். சிவனருளைப் பெற முடியும். ஏழரைச் சனி பீடித்திருப்பவர்களுக்கு சரியான பரிகாரம் வில்வார்ச்சனை தான். வில்வப் பழங்களை மஹாலக்ஷ்மி ஹோமத்திற்குப் பயன்படுத்துவார்கள்.
சித்திரை நட்சத்திரத்தன்று வில்வ மரத்தின் அடியில் வீற்றிருக்கும் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்து, வில்வமரத்தைச் சுற்றி வந்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.
மருத்துவ குணங்கள்:
வில்வமரத்தின் இலைகள், பட்டை, வேர், காய், கனி, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் உடையவை. இலைகளில் இருந்து சாறு பிழிந்து ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சாறைக் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம், காய்ச்சல் நீங்கும். மேலும் வில்வ இலைகளுடன் தண்ணீர் சேர்த்து அதனைக் காய்ச்சி வடிகட்டி தினந்தோறும் ஒரு டம்ளர் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, மலச்சிக்கல் ஆகிய நோய்கள் பறந்துவிடும். தசமூல என்று ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் வில்வ வேர் முக்கியமானதாக உள்ளது. இந்த மருந்து பசியின்மை மற்றும் மகப்பேறுக்குப் பின் ஏற்படும் நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.