பதிவு செய்த நாள்
19
டிச
2016
10:12
சபரிமலை:சபரிமலையில், 26ம் தேதி காலை, 11:55 முதல் மதியம், 1:00 மணிக்குள், மண்டல பூஜை நடக்கிறது. அன்று காலை, 10:30 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும்.சபரிமலையில், நவ., 16ல் துவங்கிய மண்டல காலம், நிறைவு கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகளின் நிறைவு தான், மண்டல பூஜை. அன்று, அய்யப்பனுக்கு திருவிதாங்கூர் மன்னர், சித்திரை திருநாள் வழங்கிய தங்க அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும். மண்டல பூஜைக்கு, இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. 26ம் தேதி பகல், 11:55 முதல் மதியம், 1:00 மணிக்கு இடையிலான முகூர்த்தத்தில் இந்த பூஜை நடைபெறும்; 1:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.இதனால், வழக்கமாக பகல், 12:30 வரையிலும் நடைபெறும் நெய்யபிஷேகம், அன்று காலை, 10:30 மணி வரை மட்டுமே நடைபெறும். அதன்பின் வரும் பக்தர்கள், நெய்யபிஷேகம் செய்ய முடியாது. நெய் தோணியில் தான் ஊற்றி செல்ல வேண்டும். அன்று இரவு, 10:00 மணிக்கு நடை அடைத்த பின், மகரவிளக்கு கால பூஜைகளுக்காக, டிச., 30 மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கும். 31 அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறந்ததும், மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் துவங்கும்.மண்டல பூஜை நாளில், பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் இன்று, கூடுதல் போலீசார் சன்னிதானம் வருகின்றனர்.