பதிவு செய்த நாள்
17
ஜன
2017
02:01
கிணத்துக்கடவு : கோதவாடி ஆல்கொண்ட திருமால் கோவிலில், மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மனிதர்களுக்கும், மாட்டிற்கும் நோய் ஏற்பட்டால், அதன் உருவ பொம்மை வாங்கி வைத்து கிருஷ்ணனை வழிபட்டால், நோய் நீங்குவது ஜதீகமாக இருந்து வருகிறது. பொங்கல் துவங்கியதில் இருந்து மூன்று நாட்களுக்குள் கன்று ஈன்றெடுத்தால், அந்த கன்று சாமிக்கு நேர்ந்து விடப்படுகிறது. அதன்படி நேற்று பூப்பொங்கலையொட்டி, தேவராடிபாளையத்தை சேர்ந்த நான்கு சலங்கை மாடுகளை ஊர்வலமாக அழைத்து கொண்டு வந்து, கோவில் முன்பு நிறுத்தி கிருஷ்ணனை வழிபட்டனர். இதேபோல், நல்லட்டிபாளையம், பட்டணம், செட்டியக்காபாளையம், கோதவாடி, அரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் மாடுகளை அழைத்து வந்து வழிபாடு செய்தனர். பின், மாடு, மனிதன் போன்ற உருவ பொம்மைகளை வாங்கி வைத்து பொதுமக்கள் கிருஷ்ணனை வழிபட்டனர். இக்கோவிலில் மாலை 5.00 மணியளவில், ஆற்றில் இருந்து கரகம் அழைத்து வந்து, சிறப்பு வழிபாடும் நடந்தது.