திருச்செந்தூர் முருகன் கோயிலில் மூலவர் பிரதிஷ்டை தின வருஷாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2017 05:01
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில், மூலவர் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு வருஷாபிஷேக விழா நடந்தது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டு தோறும் இரு தினங்களில் வருஷாபிஷேகம் நடக்கும்.
மூலவர் பிரதிஷ்டை தினமான, தை மாத உத்திரத்திலும், பின் கோயில் கும்பாபிஷேகம் நடந்த ஆனி மாதத்திலும் வருஷாபிஷேகம் நடக்கும். மூலவர் பிரதிஷ்டை தினமான அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 க்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், பின் மூலவருக்கு தீபாரதனை நடந்தது.
காலை 6.30 மணிக்கு தங்க கொடிமரப்பகுதியில் புனித நீர் கும்பங்களுக்கு சிறப்பு பூஜை, தீபாரதனை நடந்தது. 8.40 மணிக்கு கும்பங்கள், கோயில் விமானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. 8.50 மணிக்கு மூலவர் விமானத்திற்கும், அதனை தொடர்ந்து சண்முகர், வள்ளி, தெய்வானை, பரிவார மூர்த்திகளின் விமானங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின் கும்பங்களுக்கு சிறப்பு பூஜை, தீபாரதனை நடந்தது. காலை 10.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் மாலை குமரவிடங்க பெருமான், வள்ளி,தெய்வானை, சுவாமிகள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. வருஷாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.