பதிவு செய்த நாள்
23
ஜன
2017
12:01
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள், பஜனை பாடியபடி பாதயாத்திரையாக சென்றனர்.
புதுச்சேரி லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில், உலக நன்மை வேண்டி, காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து நேற்று காலை 6:00 மணிக்கு பாதயாத்திரை துவங்கியது. திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள், மங்களாசாஸனம் செய்து துவக்கி வைத்தார், 50க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து வந்திருந்த பஜனை குழுவினர் மற்றும் புதுச்சேரி, தமிழக பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வைத்திக்குப்பம் வெங்கடா ஜலபதி பஜனைக் கூடம், சத்தியநாராயண ராமானுஜதாசன் பஜனை குழுவினருடன், குயவர்பாளையம் அரிகர பஜனை மடம் சார்பில் கிருஷ்ணர் ரதமும், யாத்திரையில் பங்கேற்றது.
பாதயாத்திரையொட்டி, லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. வில்லியனுார் கீழ் அக்ரகாரம் பெரியாழ்வார் திருத்தொண்டு சபையின் பஜனை, சரண்யா பக்தி இசை நடந்தது. ராமானுஜரும் திருவேங்கடமும் என்ற தலைப்பில் திண்டிவனம் வெங்கடேச ராமானுஜதாசர் ஆன்மிக சொற்பொழிவாற்றினர். தஞ்சை தேவநாத ராமானுஜதாச பாகவதர் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. ஆன்மிக வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ, கவுரவ தலைவர் பக்தவச்சலம், ஆடிட்டர் பூவராகவன், பொருளாளர் வாசுதேவன் மற்றும்
நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பாதயாத்திரை சென்றவர்களுக்கு வழி நெடுகிலும் அன்னதானம், குடிநீர் வழங்கப்பட்டது.