பதிவு செய்த நாள்
18
பிப்
2017
12:02
குளித்தலை: கல்லடையில் நடந்த பழனியாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். குளித்தலை அடுத்த கல்லடையில், விநாயகர், பழனியாண்டவர் கோவில்கள் கட்டப்பட்டு, பொதுமக்கள் சார்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து கும்பாபிஷேக விழாவுக்காக, குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, கடந்த, 15ல் பால் குடம், தீர்த்தகுடங்கள் எடுத்து வரப்பட்டு, கோவிலில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதன்பின், முதல் நாள் விக்னேஸ்வரர், வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம்; இரண்டாவது நாள் யாகசாலை பூஜையில் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், சுதைகளுக்கு கண் திறத்தல், சிலைகளுக்கு மருந்து சாத்துதல்; மூன்றாம் நாள், யாகசாலை பூஜையில் திராவியகுதி, யாத்ரா தானம், தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தது. நேற்று, விநாயகர், பழனியாண்டவர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, வானத்தில் கருடன் வட்டமிட்டது. சிவாச்சாரியர்கள், கோவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி பூஜைகள் செய்தனர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.