கூடலுார்: கூடலுார் சீலைய சிவன் கோயிலில் மழை வேண்டி சுவாமிக்கு 1,008 குடம் தண்ணீர் அபிஷேகம் செய்யப்பட்டது.கடந்த சில மாதங்களாக மழையின்றி பெரியாறு அணை நீர்மட்டம் மிகக் குறைந்து நேற்று காலை நிலவரப்படி 109.30 அடியாக ( மொத்த உயரம் 152 அடி) இருந்தது. பெரியாற்றின் முதல் மடையான கம்பம் பள்ளத்தாக்கில் நீர்மட்டம் குறைவு காரணமாக கடந்த 2 போக நெல் சாகுபடியை முழுமையாக செய்ய முடியவில்லை. மேலும் கோடைகாலமான வரும் 3 மாதங்களுக்கும் பெரியாறு அணை நீரை குடிநீராக பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பில் மழை பெய்தால் மட்டுமே சாகுபடிக்கும், குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், கூடலுார் சீலைய சிவன் கோயிலில் மழை வேண்டிய சிறப்பு பூஜை நடந்தது. விவசாயிகளும், மக்களும் கொண்டு வந்த 1,008 குட தண்ணீர் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலையில் நடந்த தண்ணீர் அபிஷேகத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.