பதிவு செய்த நாள்
27
மார்
2017
10:03
மதுரை: பூஜையின் போது, உடலை மட்டும் அமர்த்திக் கொண்டு, மனதை வேறு இடத்தில் வைத்து கடவுளை வணங்கக் கூடாது, என, சிருங்கேரி சாரதா பீடம் பாரதீ தீர்த்த சுவாமி அருளுரை வழங்கினார். மதுரை, கொடிமங்கலம் சீதாலட்சுமி அம்மன் கோவிலுக்கு, நேற்று வந்த, பாரதீ தீர்த்த சுவாமி, விதுசேகர பாரதீ சுவாமி ஆகியோர், பூரண கும்ப மரியாதையை ஏற்றுக் கொண்டனர். பாரதீ தீர்த்த சுவாமி பேசியதாவது: ஆதிசங்கரர் வழியில், வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும். அவரைப் போல் கடவுளை தியானிக்கவும், வணங்கவும் வேண்டும். அவர், கடவுள் வழிபாட்டில் ஈடுபடும் போது, சிவனிடம் இல்லாத ஒரு பொருளை வழங்க விரும்பினார். மனம் மட்டும் தான், சிவனிடம் இல்லாத பொருள்; அதையே அவர் சமர்ப்பித்தார். பூஜையின் போது கடவுளுக்கு சமர்ப்பிக்கும் பூக்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. நாம் எந்த அளவு, ஈடுபாட்டுடன் வணங்குகிறோம் என்பதே முக்கியம். முழு மனதுடன், 10 நிமிடங்கள் கடவுளை வணங்கினாலும் போதுமானது. இவ்வாறு அவர் பேசினார். பின், விதுசேகர பாரதீ சுவாமி உபன்யாசம் செய்தார். விழா ஒருங்கிணைப்பாளர்கள் மூத்த வழக்கறிஞர் கிரிஜா சங்கர், வெங்கட்ராமன் மற்றும் பலர் பங்கேற்றனர்.சுவாமிகள் இருவரும் நாளை காலை, 10:00 மணிக்கு, பொதுமக்களுக்கு தரிசனம் தருகின்றனர். மாலை, 4:00க்கு புறப்பட்டு, 6:00 மணிக்கு பைபாஸ் ரோடு சிருங்கேரி சங்கர மடத்தில் பூரண கும்ப வரவேற்பு பெறுகின்றனர். இரவு, 8:30 மணிக்கு, சாரதா சந்திரமவுலீஸ்வர பூஜை நடக்கிறது.